கீவ் நகரில் உக்ரைன் அதிபரை சந்தித்தார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 45 நாளாகிறது. ராணுவ கட்டமைப்புகளை தகர்க்கப் போவதாக கூறி போர்தொடுத்த ரஷியா, அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள், அரசு கட்டிடங்கள், குண்டு வீச்சு தவிர்ப்பு புகலிடங்கள் என தாக்குதல் வரம்பை நீட்டித்தது.

தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்ற முடிந்தும் வெற்றி பெறாத நிலையில் ரஷிய படைகள் தனது கவனத்தை இப்போது கிழக்கு உக்ரைன் மீது திருப்பி உள்ளது.

போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன.

இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார். கீவ் நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் உதவியாளர் இது தொடர்பான தகவலை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததோடு, இருவரும் சந்தித்துப் பேசிய புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

 

 

Malaimalar