நஜிப்பை குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதியை, எம்ஏசிசி விசாரிக்கிறது

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி மீது மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் ஒரு  விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.

விசாரணை தொடங்கப்பட்டதை எம்ஏசிசி தலைமை ஆணையர் அசாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.

தி ஸ்டார் கருத்துப்படி, ஒரு புகார் செய்யப்படும் போதெல்லாம் விசாரணை செய்வது நடைமுறையின் ஒரு பகுதியாகும் என்று அவர் கூறினார்.

“ஆம், நாங்கள் எங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளோம். அதிகாரப்பூர்வமாக ஒரு புகார் செய்யப்பட்டவுடன் விசாரணை செய்வதுதான் நடைமுறை.”

“நாங்கள் ஒரு விசாரணை துவக்கி உள்ளோம், இது புகாரின் அடிப்டையில் உள்ளதாகும். சமூக வலைத்ளம் அல்லது சமூக ஊடகம் செய்திகள் அடிப்ப்டையில் அல்ல,” என்று அவர் மேற்கோள் காட்டினார்.

ராஜா பெட்ரா கமாருதினின் இணயதளமான மலேசியா டுடே, நஸ்லானின் “விளங்காத செல்வம்” என்று வகையில் ஒரு குற்றச்சாட்டை பதிவு செய்திருந்தது..

அது குறித்து நஸ்லான் காவல்துறையில் ஒரு புகார் செய்தார்.

முன்னதாக, நஸ்லான் (மேலே) முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவின் உறவினர் என்று ஒரு குற்றச்சாட்டும் பரப்பப்பட்டது.

அதற்கு, மகாதீரின் மகள் மரினா, அந்த கற்றறிந்த நீதிபதி உறவினராக இருந்தால் நாங்கள் மகிழ்வோம், ஆனால் நஸ்லான் உறவினர் அல்ல, என்று கூறினார்.

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சட்டக் குழுவும் நஸ்லானுக்கு 1எம்டிபி விவகாரத்தில் முரண்பாடு இருப்பதாகக் கூறி அவரை இழிவுபடுத்த முயன்றனர்.

நஸ்லான், 2020 இல் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, ​​ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி ஆகிய குற்றங்களுக்காக நஜிப்பிற்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் RM210 மில்லியன் ரிங்கிட் தண்டனையும் விதித்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஆண்டு இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது. இது தொடர்பாக நஜிப் கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.