இலங்கையில் ஆகஸ்டு மாதம் முதல் உணவு தட்டுப்பாடு அபாயம்- பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே எச்சரிக்கை

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் பொதுமக்கள் பாடாதபாடு பட்டு வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இதனால் அவர்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள்.

பெட்ரோல், டீசல், சமையல் கியாசுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்காக பொதுமக்கள் நீண்ட தூரம் கால் கடுக்க காத்து கிடக்கின்றனர் .

இதையடுத்து நேற்று மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தை ஓடுக்க போலீசார் மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். ஆனாலும் அசராமல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போரட்டம் காரணமாக இலங்கையில் இன்னும் அசாதாரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில கூறி இருப்பதாவது.

நாட்டில் தற்போது பயிர் செய்வதற்கான உரம் எதுவும் இல்லை. இதனால் நெல் சாகுபடி பருவத்தில் உற்பத்தியும் இருக்காது. எனவே வருகிற ஆகஸ்டு மாதம் முதல் இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. உலக அளவில் இப்போது உணவு நெருக்கடி நிலவுகிறது.

நாட்டின் இப்போதைய நெருக்கடிக்கு கடந்த நிர்வாகமே காரணம் ஆகும். நாங்கள் திவாலாகும் நிலைக்கு வந்து விட்டோம். இலங்கையில் ஒரு போதும் இது போன்ற நிலை இருந்தது இல்லை.

எங்களிடம் டாலர் இல்லை. ரூபாயும் இல்லை. நாங்கள் நிலையான நிலையில் இல்லை. மக்களால் இனியும் சுமையை தாங்க முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.