சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்- 4 பேர் பலி

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பீஜிங், தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க மையம் தெரித்தது. பெய்ஜிங் நேரப்படி நேற்று மாலை 5 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகி உள்ளது. 17 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம் 30.37 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 102.94 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் கண்காணிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்த 3 நிமிடங்களுக்குப் பிறகு, யானிலும் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சீனாவின் அடுத்தடுத்த ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததுடன் வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் அரசு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மேலும் பதினான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அதில் ஒருவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அனைவரும் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள பாக்சிங் கவுண்டியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சில வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 1,400க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் அப்பகுதிக்கு சென்றுள்ளதாகவும் சிச்சுவான் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. தண்டவாளத்தின் சில பகுதிகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் ரயில்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தென்மேற்கு ரெயில்வே ஆணையம் தெரிவித்துள்ளது.

 

Malaimalar