மனித சடலங்களால் விஷமாக மாறிய தண்ணீர்: காலராவால் சாவின் விளிம்பில் உக்ரைன் மக்கள்!

மரியுபோல் நகரத்தின் நீர் விநியோகங்களில் கலக்கும் மனித சடலங்களின் விஷங்களால், காலரா தொற்று தீவிரமாக பரவி நகரில் ஆயிரக்கணக்கானவர்களை கொல்லக்கூடும் என அந்த நகரின் மேயர் வாடிம் பாய்சென்கோ எச்சரித்துள்ளார்.

உக்ரைனின் மிகமுக்கியமான துறைமுக நகரான மரியுபோலை ரஷ்ய ராணுவ படைகள் பல வார முற்றுகைக்கு பிறகு, முழுவதுமாக தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர்.

ரஷ்யா படையினரின் இந்த பல வார குண்டுவீச்சி மற்றும் முற்றுகை தாக்குதலின் போது, பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என ஆயிரக்கணக்கானனோர் கொல்லப்பட்டனர்.

இந்தநிலையில், உக்ரைனின் தேசிய தொலைக்காட்சியில் பேசிய நகரின் மேயர் வாடிம் பாய்சென்கோ, ரஷ்ய படையினர் நடத்திய குண்டுவீச்சில் கொல்லப்பட்ட பொதுமக்களின் உடல்களை அப்புறப்படுத்துவதில் ஆக்கிரமிப்பாளர்கள் நிதானமாக செயல்பட்டு வருகின்றனர், இதனால் கட்டிட இடிபாடுகள் மற்றும் நகரின் நீர் நிலைகளில் இன்னமும் உயிரிழந்தவரிகளின் உடல்கள் ஆங்காங்கே கிடக்கின்றன என தெரிவித்தார்.

அத்துடன் நகரின் நீர் வினியோகமும் முற்றிலுமாக சிக்கலை சந்திந்துள்ளது எனவும் ஆறுகள் மற்றும் கிணறுகளில் மனித சடலங்களின் விஷங்கள் கலந்துள்ள நிலையில், மிகப் பெரிய பிரச்சனை உருவாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆக்கிரமிப்பாளர்கள் நகருக்கு தண்ணீர் கொண்டு வந்தாலும் அது போதுமானதாக இல்லாததால், பொதுமக்கள் சடலங்களால் விஷங்களாக மாறி இருக்கும் கிணற்று நீரை சென்று மக்கள் எடுத்து வருகின்றனர்.

மேலும் பிப்ரவரி மாத இறுதியில் இருந்து இதுவரை நகரில் குப்பை சேகரிப்பு நடைபெறாதால் சுகாதார சிக்கல்கள் அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மேயர் பாய்சென்கோ, இத்தகைய சுகாதார சிக்கல்கள் நகரத்தில் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருவதால், நகரின் காலரா தொற்று வெடிப்பு பல மடங்கு அதிகரித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழக்ககூடும் என எச்சரித்தார்.

காலராவால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள மக்களை மரியுபோலில் தனிமைப்படுத்தி வைத்து இருப்பதாகவும், ”யாரும் நகருக்கு உள்ளேயும் நகரை விட்டு வெளியேயும் அனுமதிக்கப்படுவது இல்லை” என முன்னதாக பிபிசியுடன் மேயர் தெரிவித்து இருந்தார்.

Lankasri