ரஷிய தாக்குதலில் மரியுபோல் நகரில் மேலும் 24 குழந்தைகள் பலி – உக்ரைன் குற்றச்சாட்டு

ரஷியா போர் தொடுத்ததில் இருந்து இதுவரை 287 குழந்தைகள் கொல்லப்பட்டு உள்ளனர் என உக்ரைன் அரசு குற்றம்சாட்டியது.

உக்ரைனில் 50 லட்சம் பேர் வன்முறை மற்றும் தாக்குதலில் சிக்கும் அபாயத்தில் உள்ளனர் என ஐ.நா. சபை தெரிவித்திருந்தது.

ரஷியா, உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரில் சிக்கி இதுவரை 250-க்கும் அதிக குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என இம்மாத தொடக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபை தகவல் தெரிவித்தது.

இந்நிலையில், ரஷியாவின் தாக்குதலில் சிக்கி மரியுபோல் நகரின் டோநெக் பகுதியில் மேலும் 24 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ரஷியா உடனான போரில் இதுவரை 287 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

492 பேருக்கு கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளன என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை இறுதி செய்யப்படாதவை. தற்காலிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டை இன்னும் நிறைவு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், ரஷியாவின் தாக்குதலை தடுக்க உக்ரைன் படைகள் அனைத்தையும் செய்துவருகிறது.

உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு நகரங்களில் கடும் சண்டை நடைபெற்று வருகிறது. தெற்கு பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகரில் வான்வழி தாக்குதலை தொடங்கி உள்ளோம் என தெரிவித்தார்.

 

Malaimalar