உலகில் அமைதியான நாடுகள் குறியீட்டு தரப்படுத்தலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

உலகில் மிகவும் அமைதியான நாடுகள் தொடர்பான குறியீட்டு தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனடிப்படையில், 2021 ஆம் ஆண்டு 113வது இடத்தில் இருந்த இலங்கைக்கு 2022 ஆம் ஆண்டு தரப்படுத்தலின் படி 90 வது இடம் கிடைத்துள்ளது.

குளோபல் பீஸ் இன்டெக்ஸ்( Global Peace Index) இந்த தரப்படுத்தலை மேற்கொண்டுள்ளது.

எவற்றை அடிப்படையாக கொண்டு தரப்படுத்தப்படுகிறது

பயங்கரவாத செயற்பாடுகள், அரசியல் ஸ்திரமின்மை, அரசியல் பயங்கரவாதம், அயல் நாடுகளுடனான உறவுகள், அகதிகள், இடம்பெயர்வுகள், உக்ரைன்-ரஷ்யா யுத்தம் ஆகிய பலவற்றை கவனத்தில் கொண்டு இம்முறை தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2022 ஆமு் ஆண்டில் உலகில் மிகவும் அமைதியான நாடுள் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்து, அயர்லாந்து, டென்மார்க் மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகள் முறையே முதல் 5 இடங்களில் உள்ளன.

தரப்படுத்தலில் மிகவும் கீழ் மட்டத்தில் உள்ள 5 இடங்களில் ஆப்கானிஸ்தான், ஏமன், சிரியா,ரஷ்யா மற்றும் தென் சூடான் ஆகிய நாடுகள் உள்ளன.

மிகவும்  ஆபத்தான நாடு

கடந்த 2021 ஆம் ஆண்டு 90 நாடுகளின் முன்னேற்றங்களுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு 71 நாடுகள் பின்னடைவை சந்தித்துள்ளள. ஆப்கானிஸ்தான் தொடர்ந்தும் 5வது ஆண்டாக உலகின் மிகவும் ஆபத்தான நாடாக இருந்து வருகிறது.

அத்துடன் உலக அமைதி குறியீட்டில் உக்ரைன் மிகப் பெரிய சரிவை பதிவு செய்துள்ளது. ரஷ்ய படையினர், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து, உக்ரைன் 17 இடங்கள் கீழ் நோக்கி சென்று 153வது இடத்தில் உள்ளது.

அதேவேளை ஐஸ்லாந்து கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து உலகில் அமைதியான நாடுகளின் குறியீட்டில் தொடர்ந்தும் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

மேலும் உக்ரைன், கினியா, புர்கினா பாசோ, ரஷ்யா மற்றும் ஹைட்டி ஆகிய ஐந்து நாடுகள் உலகில் அமைதியான நாடுகளின் குறியீட்டின் அடிப்படையில் மிகவும் சீரழிவை எதிர்நோக்கியுள்ள நாடுகளாகும்.

அதேவேளை எகிப்து, சவுதி அரேபியா, பிலிப்பைன்ஸ் மற்றும் அல்ஜீரியா நாடுகள் உலகில் அமைதியான நாடுகள் வரிசையில் முன்னேற்றமடைந்துள்ளன.

இதனிடையே உலகில் மிகவும் அமைதியான பிராந்தியமாக ஐரோப்பா குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அங்குள்ள 10 நாடுகளில் 7 நாடுகள் மிகவும் பாதுகாப்பான நாடுகள் என கூறப்பட்டுள்ளது.

 

 

Tamilwin