தேசியக் கொடியுடன் வீதிகளுக்கு வருமாறு நாட்டு மக்களிடம் ஜனாதிபதி கோரிக்கை

2022ஆம் ஆண்டுக்கான் ஆசியக்கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியும், 2022ஆம் ஆண்டுக்கான ஆசிய வலைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் வலைப்பந்தாட்ட அணியும் நாளை (13) நாடு திரும்பவுள்ளது.

,இன்று, காலை 6 மணியளவில் குறித்த இரு குழாமினரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாகன பேரணியாக அழைத்து வரப்படவுள்ளனர்.

ஜனாதிபதியின் கோரிக்கை

இந்நிலையில், தாய்நாட்டை ஆசியாவின் உச்சியில் உயர்த்தி சர்வதேசப் புகழ் பெற்ற விளையாட்டு வீர, வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி வரவேற்க தேசியக் கொடியுடன் பிரதான வீதிகளுக்கு வருமாறு பொது மக்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து இலங்கை காவல்துறையினரால் வாகன அணிவகுப்பில் வீரர்கள் அணிவகுத்து கொழும்புக்கு அழைத்து வரப்படுவார்கள்.

இந்த வாகன அணிவகுப்பு கொழும்பு – நீர்கொழும்பு வீதி வழியாக இலங்கை கிரிக்கெட் தலைமை அலுவலகம், மிட்லாண்ட் பிளேஸ், கொழும்பு 07 மற்றும் கொழும்பு 07 டொரிங்டன் சதுக்கம் என்பவற்றின் ஊடாக விளையாட்டு அமைச்சின் வளாகத்திலுள்ள வலைப்பந்து சம்மேளன தலைமையகத்தை சென்றடையும்.

இந்த வாகன அணிவகுப்பு கட்டுநாயக்க விமான தளத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு முற்பகல்; 9 மணிக்கு கொழும்பு அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற 2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 23 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணியை வெற்றிக்கொண்டிருந்தது.

வலைப்பந்தாட்ட இறுதிப்போட்டி

இதன்மூலம் இலங்கை அணி 6 தடவைகள் ஆசியக்கிண்ணத்தினை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற வலைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் இலங்கை  வலைப்பந்தாட்ட மகளிர் அணி 63:53 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றிருந்தது.

 

 

-tw