நாடாளுமன்றம் கலைப்பு, 60 வது நாட்களுக்குள் 15 -வது பொதுத்தேர்தல் 

15ஆவது பொதுத் தேர்தலுக்கு வழி வகுக்கும் வகையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்துள்ளார்.

அதாவது 60 நாட்களுக்குள் நாடு முழுவதும் தேர்தல் நடத்தப்படும்.

“கூட்டாச்சி அரசியலமைப்பின் உறுப்புரை 40(2)(b) மற்றும் பிரிவு 55(2) க்கு இணங்க, யாங் டி-பெர்டுவான் அகோங் இன்று, அக்டோபர் 10, 2022 அன்று நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான எனது கோரிக்கையை அங்கீகரித்துள்ளார்” என்று இஸ்மாயில் ஒரு சிறப்பு  அறிக்கையில் தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல் மற்றும் வாக்குப்பதிவு தேதிகளை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.

இரண்டரை வருட காலப்பகுதியில் மூன்று வெவ்வேறு நிர்வாகங்களின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலையற்ற தன்மை கருத்திற்கொண்டு மக்களின்  ஆணையை மீண்டும் பெற நாடாளுமன்றத்தை கலைப்பதே  தீர்வு  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நாட்டின் அரசியல் நிலையான தன்மை அடைவதற்கும், GE15 க்குப் பிறகு உறுதியான, நிலையான மற்றும் மரியாதைக்குரிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கும் மக்கள் ஆணை ஒரு சக்திவாய்ந்த மாற்று மருந்தாகும்,” என்று அவர் கூறினார்.

2023 ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, உடனடித் தேர்தல் என்ற ஊகங்களுக்கு மத்தியில் இன்றைய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் GE15 நடத்தப்பட வேண்டும் என்று அம்னோ வலியுறுத்தி வருகிறது, ஆனால் கட்சியின் முக்கிய போட்டியாளர்களான பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெரிகத்தான் நேஷனல் ஆகியவை அதற்கு எதிராகப் பேசியிருந்தன.

பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெரிகத்தான் நேஷனல் இரண்டின் தலைவர்களும் பருவமழை, பொருளாதார நிலைமை, தொற்று விளைவுகள் மற்றும் ஆண்டு இறுதி விழாக்கள் ஆகியவை தேர்தலை தாமதப்படுத்துவதற்கான காரணங்களாகக் குறிப்பிட்டுள்ளனர்.

 

-FMT