இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு: ஜப்பான் தூதுவர் உறுதி

தற்போது ஜப்பானில் பல்வேறு துறைகளில் ஊழியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. உங்களுக்கு உரிய திறன்கள் காணப்படுமாயின், ஜப்பான் மொழித் திறன் இருக்குமாயின், ஜப்பானில் பணியாற்றுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றது என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார்.

மலையகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி உள்ளிட்ட குழுவினர் இன்று (02.11.2022) இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளனர்.

சந்திப்பின் பின் ஹட்டனில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊழியர் பற்றாக்குறை

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது ஜப்பானில் பல்வேறு துறைகளில் ஊழியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. தாதி, நலன் பேணல், தானியங்கி இயந்திர வல்லுநர் மற்றும் ஏனைய துறைகளில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது.

எனவே ஜப்பானில் தொழில்வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதுடன், பணியாற்றுவதற்கான சாத்தியங்களும் காணப்படுகின்றது. அதனை நாம் வரவேற்கின்றோம். குறிப்பாக இளையோருக்கு அதற்கான ஆசை இருக்கும்.

இளம் திறமையுள்ள தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள்

ஜப்பானில் மாத்திரமல்ல உலகளாவிய ரீதியிலுள்ள நாடுகளில் இளம் திறமையுள்ள தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் காணப்படுகின்றன. இந்த நிலையமானது இளையோருக்கு பல்வேறு துறைகளில் பயிற்சிகளை வழங்குவது அற்புதமானது.

இந்த தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் செயற்பாடுகளால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளேன். லங்கையில் பின்தங்கிய பகுதியாக மலையகம் காணப்படுகின்றது.

தொடர்ந்தும் எங்களுடைய உதவி மலையகத்திற்கும் கிடைக்கும், எனினும் ஜப்பான் அரசாங்கம் இலங்கையின் அனைத்து பிராந்தியங்களினதும், சிறுபான்மையினரினதும் வளர்ச்சி ஒத்துழைப்பை வழங்குகின்றது.”என கூறியுள்ளார்.

 

 

-tw