மாவீரர் நாள் ஏற்பாடுகள் தீவிரம்..! கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக – திரண்டெழ அழைப்பு

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

நவம்பர் 21ஆம் திகதி காலை 9மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள இக் கல்வெட்டுக்கள் நவம்பர் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்குமென யாழ். மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் தெரிவித்தார்.

திரண்டெழ அழைப்பு

அத்தருணத்தில் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தமுடியும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்புத்தர வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இந்தக் கோரிக்கையை அவர் விடுத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

உரிய அனுமதியுடன் நினைவேந்தல்

“தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான இடத்தில் உரிய அனுமதிகளை பெற்று குறித்த கல்வெட்டுக்கள் வைக்கப்படவுள்ளது.

உயிரிழந்த உறவுகளை நினைவு கூறுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது.

அந்த வகையில் எமது உறவு சகோதர சகோதரிகளை நினைவு கொள்வதை யாரும் தடுக்க முடியாது” – என்றார்.

 

 

-ibc