ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு ஆட்கடத்தப்படும் இலங்கையர்கள் – பொது மக்களிடம் உதவிக் கோரல்

சட்டவிரோதமாக லெபனான் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த தகவல் தெரிந்தால் 1989 எனும் 24 மணிநேரமும் இயங்கும் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

லெபனான் ஊடாக படகுகள் மூலம் இலங்கையரை இத்தாலிக்கு கடத்திச் செல்லும் நடவடிக்கை நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நேற்று தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஆட்கடத்தல்காரர்கள் லெபனானை ஒரு பரிமாற்ற மையமாக பயன்படுத்திக் கொண்டு இத்தாலிக்கு சட்டவிரோதமாக இலங்கையரை கடத்திச் செல்லும் ஆட்கடத்தல் வர்த்தகம் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.

மிகவும் ஆபத்தான முறையில் இத்தாலி நோக்கி பயணித்த பல படகுகள் விபத்துக்குள்ளானதில் காப்பாற்றப்பட்டு இடம்பெயர்ந்தவர்களாக  இருப்பவர்களுள் இலங்கையைச் சேர்ந்த பலரும் உள்ளனரென்றும் லெபனானிலுள்ள இலங்கைத் தூதரகம் இந்த சட்டவிரோத செயல்பாட்டின் ஆபத்தான தன்மை குறித்தும் இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு அறிவித்துள்ளதாகவும் பணியகம் தெரிவிக்கிறது.

இவ்வாறான ஆட் கடத்தல்காரர்களுக்கு இரையாகி தமது பெறுமதியான உயிரைப் பணயம் வைத்து பணத்தை வீணடிக்க வேண்டாமென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இவ்வாறான ஆட்கடத்தலில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 24 மணி நேரமும் இயக்கத்திலுள்ள 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது பணியகத்தின் விசாரணைப் பிரிவின் 0112864214 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அறிவிக்குமாறு பணியகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

 

-ift