நிலவை ஆராய லேண்டரை அனுப்பியது ஜப்பான்

நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழல்கள் உள்ளனவா என்பதை கண்டறியும் ஆராய்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக லேண்டர், ரோவர் போன்ற ஆய்வு கலங்களை உலக நாடுகள் நிலவுக்கு அனுப்பி வருகின்றன.

எனினும் ரஷியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே நிலவை ஆய்வு செய்யும் பணிகளில் பல சாதனைகளை படைத்து முன்னணியில் உள்ளன. அதே சமயம் இந்தியா, ஜப்பான் போன்ற பல நாடுகளும் நிலவு ஆராய்ச்சியில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில் ஜப்பானை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ஐ-ஸ்பேஸ் நிலவை ஆய்வு செய்வதற்காக ஹகுடோ-ஆர் என்ற லேண்டரை உருவாக்கியது.

இந்த லேண்டரை அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்ப ஐ-ஸ்பேஸ் நிறுவனம் ஒப்பந்தம் போட்டது. அதன்படி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளி படை நிலையத்தில் இருந்து நேற்று காலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் ஜப்பானின் ஹகுடோ-ஆர் லேண்டருடன் நிலவுக்கு புறப்பட்டது. இதன் மூலம் நிலவுக்கு லேண்டரை அனுப்பிய உலகின் முதல் தனியார் நிறுவனம் என்கிற பெயரை ஐ-ஸ்பேஸ் நிறுவனம் பெறுகிறது.

பால்கன்-9 ராக்கெட்டில் ஜப்பானின் ஹகுடோ-ஆர் லேண்டருடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘ரஷீத்’ என்கிற ரோவரும், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ‘பிளாஷ் லைட்’ செயற்கைக்கோளும், ஜப்பானின் மற்றொரு தனியார் விண்வெளி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சிறிய ரோபோவும் நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதில் ஜப்பானின் ஹகுடோ-ஆர் லேண்டர் நிலவை சென்றடைவதற்கு 5 மாதங்கள் ஆகும் என்றும், அது நிலவின் வடகிழக்கு பகுதியில், 87 கி.மீ. குறுக்கே 2 கி.மீ. ஆழத்திற்கு மேல் உள்ள அட்லஸ் பள்ளத்தை இலக்காக கொண்டு நகரும் எனவும் ஐ-ஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

-mm