பாகிஸ்தான் மக்கள் மீது ஆப்கானிஸ்தான் எல்லைப்படை துப்பாக்கிச்சூடு- 6 பேர் உயிரிழப்பு, 17 பேர் காயம்

ஆப்கானிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையினர், பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி வந்து பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சாமன் மாவட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆப்கானிஸ்தான் படைகள் பொதுமக்கள் மீது பீரங்கி உள்பட கனரக ஆயுதங்கள் மூலம் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

இதில் குறைந்தது ஆறு பாகிஸ்தானியர்கள் உயிரிழந்ததாகவும்,17 பேர் காயமடைந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆப்கான் படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பலுசிஸ்தானின் மாகாணத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நிலைமையின் தீவிரம் குறித்து காபூலில் உள்ள ஆப்கானிஸ்தான் அதிகாரிகளை தொடர்பு கொண்ட பாகிஸ்தான் அதிகாரிகள் எச்சரித்ததுடன், மீண்டும் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி உள்ளனர்.

 

-mm