எதிர்காலத்தில் ரணில், ராஜபக்ஷக்கள் இணைந்து செயற்படலாம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்க பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சிறந்தது என்பதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

எதிர்கால அரசியலில் ரணில்,  ராஜபக்ஷர்கள் ஒன்றிணைந்து செயற்படலாம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். பத்தரமுல்ல பகுதியில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எமது அரசாங்கம் எடுத்த ஒருசில தவறான தீர்மானங்கள் பொருளாதார  பாதிப்பை தீவிரப்படுத்தியது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த போது பெரும்பான்மை பலத்தை வைத்துக் கொண்டு அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பலமுறை அழைப்பு விடுத்தார்.

பொருளாதார பாதிப்பிற்கு மத்தியில் அரசாங்கத்தை பொறுப்பேற்றால் தமது எதிர்கால அரசியல் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் அவர் அரசாங்கத்தை பொறுப்பேற்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஏகமனதாக தீர்மானித்தது.

எமது தீர்மானம் சரியானது என்பதை நாட்டு மக்கள் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எதிர்கால அரசியலில் ரணில்,  ராஜபக்ஷர்கள் ஒன்றிணைந்து செயற்படலாம்.

 

 

-if