பாகிஸ்தானில் உள்ள ஸ்வீடன் தூதரகம் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிப்பு

பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தானில் உள்ள ஸ்வீடன் தூதரகம் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஸ்வீடன் தூதரகம் பாதுகாப்பு காரணமாக காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. புலம்பெயர் பிரிவில் தற்போது எந்த விதமான கோரிக்கைகளையும் கையாள முடியாது என தூதரகத்தின் இணைய தளத்தில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சமீபத்தில் ஸ்வீடனில் நடந்த குரான் எரிப்பு சம்பவத்துடன் தொடர்புபடுத்தி இந்த முடிவை அரசு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஸ்வீடனைச் சேர்ந்த நபர் கடந்த ஜனவரி 21 அன்று ஸ்டாக்ஹோமில் உள்ள துருக்கிய தூதரகத்தில் போலீசார் முன்னிலையில் குரான் நகலை எரித்த சம்பவம் உலகெங்கும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை காரணமாக பாகிஸ்தானில் உள்ள தனது தூதரகத்தின் ஒரு பகுதியை கடந்த பிப்ரவரியில் சீனா தற்காலிகமாக மூடியது குறிப்பிடத்தக்கது.

 

-dt