பொருளாதார நெருக்கடியை உணராத சிங்கள மக்கள்

அகிம்சையை போதிக்கும் வழியில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு காணாமலாக்கப்பட்ட தமது பிள்ளைகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

போராட்ட பந்தலில் இன்று (19.04.2022) அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

தியாகத்தாய் அன்னை பூபதி அம்மாவினுடைய 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நாள் இன்று. தமிழர்களுக்காக தன்னை தியாகம் செய்ததில் ஒரு தாயாக அன்னை பூபதி அம்மா உயர்ந்த இடத்தில் இருக்கிறார். அவரை நாங்கள் வழங்கி கொள்கிறோம்.

இன்று 2250 நாளாக தாய்மாரும் இன்று தங்களுடைய பிள்ளைகளுக்காகவும் தமிழர்களுக்கு ஒரு தீர்விற்காகவும் தொடர்ந்து அதே வழியில் ஜனநாயக வழியில் உலகத்திற்கு அகிம்சையை போதிக்கும் வழியில் இந்த தாய்மாரும் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு தங்களுடைய பிள்ளைகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் மக்களுக்கான இறையாண்மை

அந்தவகையில் ஐரோப்பிய, அமெரிக்க ஒன்றிய நாடுகளை அழைத்து அவர்களது உதவியோடு இனப்படுகொலைக்குள்ளான காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை கண்டுபிடிப்பதற்கு பொதுஜன வாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களுக்கான இறையாண்மையை பெறுவதற்கான வாக்கெடுப்பின் மூலம் எங்களுக்கான நீதியை பெற்று அதன் மூலம் உலக ஒழுங்கில் ரோம் சாசனத்தில் கையெழுத்து வைத்து எங்களுடைய பிள்ளைகளை கண்டுபிடிப்பதற்கு ஐசிசிக்கு கொண்டு போவதற்குரிய ஐரோப்பிய அமெரிக்க ஒன்றியத்தின் உதவியுடன் இப்போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றோம்.

இலங்கை இன்றைய நிலையில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளை சீனாவிற்கு வழங்கி இலங்கையில் ராடர் தளங்களை நிறுவுவது சர்வதேச போர்ச்சூழலை இலங்கைத்தீவில் உருவாக்கி இருக்கிறது.

இனவாதிகளும் இனப்படுகொலை அரசியல்வாதிகளும் சேர்ந்து சர்வதேச போர்ச்சூழலுக்கு கொண்டுபோய் விட்டிருக்கிறார்கள். இதற்கான விளைவுகளை ஏற்கனவே இதற்கான எச்சரிக்கையாக பொருளாதார நெருக்கடியை சிங்கள மக்கள் உணர்ந்தவர்களாக தெரியவில்லை.

இந்துக்கோயில்களின் ஆக்கிரமிப்பிற்கும் அமைதியாக இருந்து தொடர்ந்து அரசியல்வாதிகளையும், இனவாதிகளையும் ஊக்குவித்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு முடிவாக சக்தி மிக்க நாடுகளை அழைப்பதன் நோக்கம் உலகத்திற்கு நீதி வழங்குகின்ற சர்வதேசம் இந்த நாடுகளுக்கும் நீதியை உடனடியாக வழங்க வேண்டும். ஏனென்றால் நம்பிக்கையை அந்த நாடுகள் இழந்துவிடும்.

சர்வதேசம் 2250 நாளாக போராடிக் கொண்டிருக்கின்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஐரோப்பிய அமெரிக்க ஒன்றிய நாடுகள் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதற்கும் தங்களுடைய பிள்ளைகளை கண்டுபிடித்து தருவதற்கும் பொதுஜன வாக்கெடுப்பிற்கு உதவியினை புரிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

 

-tw