ஐ.எம்.எவ் நிபந்தனைக்கேற்பவே ஊழல் எதிர்ப்பு சட்டம் – சஜித் குற்றச்சாட்டு

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையை நிறைவேற்றும் வகையிலேயே ஊழல் எதிர்ப்பு சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் கொண்டுவருகின்றதே தவிர, ஊழலை ஒழிப்பதற்கான நோக்கம் அவர்களிடம் இல்லை என எதிர்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச சாடியுள்ளார்.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் நேற்று பங்கேற்று உரையாற்றிய சஜித் பிரேமதாச, தேர்தலை நடத்தாது உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு அதிகாரத்தை வழங்குவதில் அரசாங்கம் அதீத ஆர்வத்தை காண்பித்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை முன்வைத்தது யார்?

மேலும் உரையாற்றிய அவர், “எமது கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, விசேடமாக சில வருடங்களுக்கு முன்னர் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை முன்வைத்தார். அவர் உண்மையில் இந்த ஊழல் எதிர்ப்பு சட்ட மூலத்தை 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி கொண்டு வந்தார். இதோ அந்த சட்டமூலம், இந்த சட்டமூலம் தற்போது விவாதிக்கும் சட்டமூலத்தை விட மிகவும் பலம் வாய்ந்தது.

நீதித்துறை அமைச்சர் உங்களுக்கு தெரியுமா? கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இந்தச் சட்டமூலத்தை நீங்கள் வர்த்தமானியில் வெளியிடவில்லை.

எனினும் கலைக்கப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் உறுப்பினர்களை மீள உள்ளீர்த்து அவர்களுக்கு அதிகாரத்தை அளிக்கும் கப்புட்டாவின் சட்டமூலத்தை வர்த்தானியிலும் பிரசுரித்துவிட்டனர்.

ஆகவே கப்புட்டாவின் சட்ட மூலத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்திக்கு ஊழல் எதிராக கொண்டு வந்த இந்த சட்டமூலத்தை குப்பையில் வீசிவிட்டனர். இதுவே இந்த நாட்டின் விதி விளையாடும் நிலைமை. ஆகவே இந்த சட்டமூலத்தை நல்லொரு விடயமாக பார்க்கின்றேன்.

விசேடமாக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை மீள அழைக்கும் தனிநபர் சட்டமூலம் 2023 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 26 ஆம் திகதி வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினத்தில் இருந்து சில தினங்களுக்குள் முதல் வாசிப்பானது ஜுலை மாதம் 5 ஆம் திகதி இடம்பெற்றது.

உள்ளூராட்சி மன்றங்களை மீள அழைக்க ஆர்வம்

தேர்தலை நடத்தாது, கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீள அழைப்பதற்கு .அந்த அளவிற்கு இந்த அரசாங்கத்திற்கு ஆர்வம் காணப்படுகின்றது. இது வெட்க கேடான செயல்.

நான் ஒன்றை விசேடமாக கூற வேண்டும். நீங்கள் புதிததாக கொண்டுவரும் சட்டமூலம் இருப்பதை விட சிறந்ததாக உள்ளது. அதனை நல்லதொரு விடயமாக பார்க்கின்றேன். எனினும் நாம் முன்னோக்கி செல்ல வேண்டிய தூரத்தை சென்றுள்ளோமா என்பதில் எனக்கு பிரச்சினை உள்ளது.

நாடு வங்குரோத்து அடைந்துள்ளது. நாட்டின் வளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தேசிய சொத்துக்கள் மக்களுக்கு பொதுவான சொத்துக்களை திருடி, கொள்ளையடித்து, சூறையாடியுள்ளனர்.

ஒரு குடும்பமே இந்த நாட்டை சூறையாடியுள்ளது. ஒரு குடும்பம் ஒன்றாக இணைந்து, இந்த நாட்டிற்கு பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளனர். திருட்டு, மோசடி, ஊழல் மற்றும் கொள்ளை, மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு முன்னெடுக்கப்படும் முறைமையில் தற்போது இருப்பதை விட நல்லதொரு மாற்றத்தை செய்ய வேண்டும்” – என்றார்.

 

 

-ib