மெக்சிகோ: பெண்களிடம் தவறாக நடந்த நபர் பாரில் இருந்து வெளியேற்றம், ஆத்திரத்தில் தீ வைத்ததில் 11 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதற்காக மதுபான கூடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர் ஆத்திரத்தில் தீ வைத்ததில் 11 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மெக்சிகோ நாட்டில் சொனோரா என்ற வடக்கு மாகாணத்தில் சான் லூயிஸ் ரியோ கொலராடோ நகரில் மதுபான கூடம் (பார்) ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த வெள்ளி கிழமை இரவு ஆண்கள், பெண்கள் என கும்பலாக கூடி, கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, ஒரு நபர் பாரில் இருந்த சில பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார் என கூறப்படுகிறது. இதுபற்றி அறிய வந்ததும் பாரில் இருந்த ஊழியர்கள் அந்த நபரை வெளியேற்றினர்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர், பின்னர் மீண்டும் திரும்பி வந்து அந்த பாருக்கு தீ வைத்து உள்ளார். இந்த சம்பவத்தில் பாரின் உள்ளே இருந்த பலர் சிக்கி கொண்டனர். தீயில் சிக்கியும், கடும் புகையாலும் 11 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 7 பேர் ஆண்கள். 4 பேர் பெண்கள் ஆவர்.

இதுதவிர, காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

 

-dt