காசாவின் பழமையான தேவாலய வளாகத்தில் இஸ்ரேல் தாக்குதல்

இஸ்ரேல் ராணுவம் நடத்தியத் தாக்குதலில் காசாவில் உள்ள பழமையான தேவாலய வளாகத்தில் பலர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்திருக்கிறது.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு, கடந்த 7-ம் தேதியன்று இஸ்ரேல்மீது திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
அதைத் தொடர்ந்து, ஹமாஸ் மீது எதிர்த் தாக்குதல் தொடுப்பதாக காசாவில் தொடர்ந்து அதிரடி தாக்குதல் நடத்திவருகிறது இஸ்ரேல். குறிப்பாக காசா இஸ்ரேல் தாக்குதலின் இரையாகி வருகிறது. காரணம் காசா, பாலஸ்தீனத்தின் முக்கியமான நகரமாகக் கருதப்படுகிறது. இங்கு இஸ்லாமியர்கள்தான் அதிகமாக வசிக்கின்றனர். ஹமாஸ் மற்றும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலால் அங்குள்ள அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

தொடர் தாக்குதல்களால் காசா நகரமே பீதியில் உறைந்திருக்கிறது. இந்த நிலையில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் உலக நாடுகள் இரண்டாகப் பிரிந்து கிடக்கின்றன.

காசா பகுதியில் உள்ள தேவாலய வளாகத்தில் தஞ்சம் புகுந்த பல இடம்பெயர்ந்த மக்கள், இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் (Greek Orthodox church) வளாகத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாலஸ்தீன பகுதியில் போர் பதற்றம் நிலவி வருபதால், காசா பகுதியைச் சேர்ந்த சில மக்கள் தஞ்சம் புகுந்திருந்த வழிபாட்டுத் தலத்திற்கு அருகில் உள்ள இடங்களை குறிவைத்து இந்த தாக்குதல் சம்பவம், நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இஸ்ரேலிய ராணுவம் தரப்பில் உறுதியான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை எனப்து குறிப்பிடத்தக்கது.

 

-ht