தமிழ் எழுத்தாளர் சங்கம் சீர்திருத்தம் பெற வேண்டும்

இராகவன் கருப்பையா – மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு மறைந்த ஊடகவியலாளர்கள் எம்.துரைராஜ் மற்றும் ஆதி குமணன் போன்றோர் தலைவர்களாக இருந்த காலக்கட்டம் உள்நாட்டுத் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒரு பொற்காலம் என்றால் அது மிகையில்லை.

எம்.துரைராஜ் கடந்த 1977ஆம் ஆண்டிலிருந்து 1987ஆம் ஆண்டு வரையிலும் அதனைத் தொடர்ந்து ஆதி குமணன் 1987ஆண்டிலிருந்து 2003ஆம் ஆண்டு வரையிலும் அச்சங்கத்திற்கு தலைவர்களாக இருந்தனர்.

அதீத ஆற்றல் மிக்க அவர்கள் அச்சங்கத்திற்கு தலைமையேற்றிருந்த  அந்தக் காலக்கட்டத்தில் இருந்த மதிப்பும் மறியாதையும் இப்போது அந்த அமைப்புக்கு இருக்கிறதா என்றால் அது ஒரு பெரிய கேள்விக் குறிதான்.

ஏனெனில் அச்சங்கம் அதன் அசலான இலக்கிலிருந்து தடம் மாறி தற்போது சோம்பிப் போய்விட்டதைப் போலான ஒரு தோற்றம் உருவாகியுள்ளது. குறிப்பிட்ட சிலர் ‘உடும்புப் பிடி’யாக அச்சங்கத்தை ‘இருக்க அணைத்துக் கொண்டது’ அதற்கு ஒரு காரணமாகக் கூட இருக்கலாம்.

ஏற்கெனவே தலைமை பொறுப்பில் இருந்த ஒருவர் தனது தவணை காலம் நிறைவடைந்தவுடன் அடுத்தடுத்து வரும் இளைய தலைமுறையினருக்கு வழி விட்டு கவுரவமாக ஒதுங்கிக் கொள்வதுதான் உத்தமம்.

வேண்டுமென்றால், அதாவது உறுப்பினர்கள் விரும்பிக் கேட்டுக் கொண்டால் அதற்கு அடுத்த ஒரு தவணைக்கு அவர் ஆலோசகராக இருக்கலாம். அதன் பிறகு அவர் சாதாரண உறுப்பினர் அந்தஸ்துக்கு இறங்க வேண்டும். இதுதான் பெரும்பாலான இயக்கங்களில் நடைமுறையில் உள்ளது.

விடாக்கண்டன் கொடாக்கண்டனாக வரலாற்றில் இல்லாத புதியதொரு பதவியை உருவாக்கிக் கொண்டு அங்கேயே காலம் முழுவதும் அமர்ந்து கொள்ள எண்ணக் கூடாது.

சுமார் 2 வாரங்களுக்கு முன் நடைபெற்ற அச்சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தின் போது புதிய தலைவர் ஒருவர் பதவியேற்ற வேளையில் ஏற்கெனவே தலைவர்களாக இருந்தவர்கள் நாசுக்காக மீண்டும் செயலவையில் நுழைந்துக் கொண்டது நமக்கு அதிர்ச்சியளிக்கிறது.

இதன் நோக்கம் என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை. அனேகமாக மீண்டும் ஒரு முறை உச்சத்தை அடைவதற்கான ஏவுதளமாக இதனை பயன்படுத்திக் கொள்வார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஏனெனில் செயற்குழு என்பது பொதுவாக புதியவர்களுக்கு ஒரு பயிற்சிக்களமாகத்தான் இருக்க வேண்டுமே ஒழிய ஏற்கெனவே தலைமை பீடத்தில் இருந்து சுகங்களை அனுபவித்தவர்களுக்கு அல்ல.

அந்த ‘சீனியர்’கள் புதியவர்களுக்கும் இளம் எழுத்தாளர்களுக்கும் வழி விட்டு ஒதுங்கிக் கொள்ளவில்லையென்றால் சங்கத்தின் நிர்வாகம் ‘குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பதை’ப் போல்தான் இருக்கும்.

சங்கத்திற்கான புதிய இலக்கு, புதிய சிந்தனை, புதிய வியூகம், போன்ற அம்சங்களை நாம் எதிர்பார்க்க முடியாது. அதற்கான வழியே இருக்காது.

“குறிப்பிட்ட ஒரு சிலரின் இத்தகைய சுயநல போக்கினால் நிறைய எழுத்தாளர்கள் சங்கத்தில் அங்கத்தினர்களாக சேர வாய்ப்பில்லாமல் வெளியே இருக்கிறார்கள்,” என வார இதழொன்றின் ஆசிரியர் ஒருவர் அண்மையில் கருத்துரைத்தார்.

“அச்சங்கத்தில் தற்போது எழுத்தாளர்களை விட சுற்றுப் பயணிகள்தான் அதிகம் உள்ளனர்,” என்றும் அவர் குறிப்பிட்டார். ஏனெனில் இப்போதெல்லாம் சங்கம் அதன் அசல் இலக்கை தவறவிட்டு சுற்றுப் பயணங்களில் அதிக கவனம் செலுத்துகிறது.

“இந்த நிலை மாற வேண்டும். புதியவர்களும் உண்மையான எழுத்தாளர்களும் அரவணைக்கப்பட வேண்டும். அதுதான் எழுத்தாளர் சங்கத்தின் மீதான மறியாதையைக் கூட்டும்,” என அந்த மூத்த பத்திரிகையாளர் விவரித்தார்.

“வெறுமனே தேர்தல் சமயங்களில் ஓட்டுப் போடுவதற்காக அடிமைகளைச் சேர்த்து வைப்பது அழகல்ல. இது போன்ற கறைகளிலிருந்து சங்கத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இன்றைய தலைமைத்துவத்திற்கு உள்ளது,” என அவர் ஆலோசனை கூறினார்.

  • வாசகர்கள் கருத்து

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் குறித்து பல ஆண்டுகளுக்கு பிறகு மலேசியா இன்றுவில் எழுத்தாளர் திரு.இராகவன் கருப்பையா அவர்கள் எழுதியது பலரும் எதிர் பார்த்த ஒன்று. யார் இந்த பூனைக்கு மணி கட்டுவார் என்று எதிர்பார்துக் கொண்டிருந்த வேளையில் அவர் இதனை சிறப்பாக செய்து விட்டார். எழுத்தாளர் சங்கத்தில் அயலகத்தலைவர் என்ற ஒரு பதவி இருந்தது இல்லை.இந்த பதவி உருவாக்கப்பட்ட ஒன்று. பதவியில் இருந்தவர்கள் சங்கத்தின் விதி முறைகளை கடைப்பிடிக்காமல் அவருக்கென்றே ஒரு பதவியை உருவாக்கி அயலகத்தலைவர் என்ற பெயரில் சங்கப்பணத்தில் வெளிநாடுகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இதனை குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும் தாங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதால் உருவாக்கப்பட்டது. அண்மையில் தமிழ்நாட்டில் இருந்து வந்த பெருங்கவிக்கோ அவர்கள் சில செயல் திட்டங்களுக்காக முன்னாள் தலைவரில் ஒருவரை கண்டு அவர் பதவியில் இருக்கும் போது சில விபரம் கேட்டடுள்ளார், அதற்கு இதில் நான் ஒன்றும் செய்ய முடியாது,  அயலகத்தலைவரை கேளுங்கள் என்று கூறியுள்ளார்.

அதன் பின்பு பெருங்கவிக்கோ அவர்கள் என்னய்யா தலைவர் என்று சொல்கின்றார், அவரால் ஒரு முடிவு எதையும் எடுக்க முடியவில்லை என்ற கேள்வியை எழுப்பினார், “அண்ணன்,தம்பி என்ற குடும்ப சொத்தா தமிழ் எழுத்தாளர் சங்கம்.?”

 அன்புடன் – இன்பச்சுடர்


மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம்  அதிகார ஆசை கொண்டவர்களின் கைக்குச் சென்றுவிட்டது. அவர்களின் நோக்கம் அதிகாரத்தை  தக்கவைத்துக் கொள்வதுதான். ஆகவே விடாப்பிடியாக செயலவையில் இருக்க முயல்கிறார்கள். புதிய புதிய பதவிகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.  ஒரு நபரின் சொல்லுக்குக் கட்டுப்படும் பல கல்வியாளர்களும் வால்பிடிக்கும் குட்டி எழுத்தாளர்களும் அந்த சங்கத்தை  மோசமான நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டனர்.

ஆனால் இதை சங்க உறுப்பினர் அல்லாத ஒருவர் வெளியில் இருந்து சொல்வதால் மாற்றம் வந்துவிடுமா என்ற கேள்வி எழுகின்றது.  காரணம் ம.த.எ சங்கம் உறுப்பினர்களைக் கொண்ட பதிவுபெற்ற ஒரு  அரசு சாரா அமைப்பு. அரசு சாரா அமைப்புகளுக்கான அமைச்சும் அதிகாரிகளும் விதிமுறைகளும் இருக்கின்றன. சட்டவிதிகளை மீறாதவரை அதிகாரிகள் சங்க நிர்வாகத்தில் தலையிடமாட்டார்கள்.

எனவே சங்கத்தின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை முடிவு செய்வது அச்சங்கத்தின் உறுப்பினர்கள்தாம்.  ம.த.எ.சங்கத்தின் இன்றைய தேக்கநிலையை   சங்க உறுப்பினர்கள்தான்  மாற்றியமைக்க முடியும்.  ஆனால் அப்படியான மாற்று சிந்தனை கொண்ட தரப்பு எதுவும் ம.த.எ.சங்கத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆகவே, சங்க உறுப்பினர் அல்லாதோர் செய்ய ஒன்றுதான் உள்ளது.  எழுத்தாளர் சங்கம் என்பது எல்லோருக்குமானது எனும் தோற்றத்தை அவர்கள் உருவாக்க முயல்வதால், நாம், தொடர்ச்சியாக அதன் பின்னடைவை சொல்ல வேண்டியது அவசியமாகின்றது. அதன் வழி மெளனம் சாதிக்கும் சங்க உறுப்பினர்களையும் சங்கத்தை ஆதரித்துக் கொண்டிருக்கும் பெருந்தகைகளையும் ஓரளவு  சிந்திக்க வைக்க முடியும்.

அ. பாண்டியன்