இலங்கை சிறையில் இருந்த ராமேசுவரம் மீனவர்கள் விடுதலை

indian_fishersஇந்திய கடல் எல்லையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது. பலமுறை எச்சரிக்கை விடுக்கப் பட்ட போதும், அதனை கண்டுகொள்ளாத இலங்கை கடற்படையினர் அவ்வப்போது மீனவர்களை கைது செய்தும் சென்று வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி ராமேசுவரம் மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படை பிடித்து சென்றது. அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்க வலியுறுத்தி  ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

இலங்கை அனுராதாபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 19 மீனவர்களும் இன்று காலை தலைமன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இலங்கை அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில்,  19 பேரும் மீனவர்கள்தான். வேறு எந்த குற்றச்சாட்டும் அவர்கள் மீது இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து மீனவர்கள் 19 பேரையும் நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலையான மீனவர்கள் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊர் திரும்புவார்கள்.

இதுதவிர, மேலும் இலங்கை சிறையில் இருக்கும் 30-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களையும் விடுவிக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

TAGS: