GTF தலைவர் சென்னையிலிருந்து திருப்பியனுப்பப்பட்டார்

உலகப் பேரவையின் தலைவர் அருட் கலாநிதி எஸ்.யே. இம்மானுவல் அடிகளார் சென்னை விமானநிலையத்திலிருந்து நேற்று மாலை திருப்பி அனுப்பப்பட்டார்.

உலகப் பேரவையின் தலைவர் அருட் கலாநிதி எஸ்.யே இம்மனுவேல் அடிகள் சென்னைப் பல்கலைக் கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம், இந்திய ஆயர் பேரவை மற்றும் பல தொலைக்காட்சி நிலையங்களில் பேருரைகளும் நேர்காணலும் நடாத்த ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தது.

நேற்று மாலை அடிகளார் சென்னை விமான நிலையத்தில் சென்றடைந்த போது ஒலி பெருக்கிகள் மூலம் அவர் பெயர் அழைக்கப்பட்டு குடிவரவு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டுள்ளார்.

அடிகளார் தனது செயற்பாடுகள் அனைத்தும் பகிரங்கமாகவே உள்ளன என்றும் மேலும் தனது பணிகளனைத்தும் மனித உரிமையையும் மனிதனின் முழுமையான விடுதலையையும் ஒட்டியதாகவே உள்ளதெனவும் எடுத்துரைத்த போதிலும் காரணம் எதுவும் கூறமுடியாத நிலையில் இது மேலிடத்து உத்தரவு எனக்கூறி, குடிவரவு அதிகாரிகள் ஒரிரு மணி நேரங்களில் நாட்டை விட்டு வெளியேறும்படி பணித்துள்ளார்கள்.

உலகப் பேரவையின் தலைவர் அருட் கலாநிதி எஸ்.யே இம்மனுவேல் அடிகள் சென்ற ஆண்டும் இந்தியா சென்று பல்வேறு தரப்பட்ட நிலையில் உள்ளவர்களுடன் உரையாடல்களையும் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.