வடக்கில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கி நாட்டை மீண்டும் பிளவுபடுத்த அரசு தயாரில்லை!

keheliyaவட மாகாணத்திற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கி நாட்டை மீண்டும் பிளவுபடுத்த அரசாங்கம் தயாரில்லை என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கட்டுகஸ்தோட்டையில் இடமபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

சுமார் 30 ஆண்டுகள் நாட்டை பீடித்திருந்த யுத்தத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இன்று நாட்டில் குண்டு வெடிப்பதில்லை.

நாட்டின் நாலாபுறத்திற்கும் செல்ல முடியும். ஆனாலும், சர்வதேச மட்டத்தில் இன்னும் பிரிவினையை முன்னெடுக்க சில சக்திகள் தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கின்றன.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்கள் மூலம் நாம் சர்வதேசத்திற்கு எமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.

அதனால் வட மாகாண சபை தேர்தல் எமது நாட்டுக்கு மிக முக்கியமானதாகும். சர்வதேசத்தில் எமது நாட்டிற்கு எதிராக செயற்படுபவர்கள் பல கனவுக் கோட்டைகளை கட்டியுள்ளனர்.

முப்பது வருட கால யுத்தத்தால் பெற முடியாது போன பிரிவினையை அரசியல் பலத்தின் மூலம் செய்ய அவர்கள் திட்டமிடுகின்றனர்.

எமது மக்கள் உயிர் தியாகம் செய்து பாதுகாத்த நாட்டை மீண்டும் துண்டுபோடுவதற்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது.

வட மாகாணத்திற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கி முப்பது வருடம் யுத்தம் செய்து ஆயுதத்தால் பெற முடியாது போன பிரிவினையை மீண்டும் அரசியல் வடிவில் கொண்டு வர அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது.

அதேபோன்று ஜனாதிபதியும் அதற்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டார். மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் எமக்கு எவ்வித சவாலும் இல்லை.

நாங்கள் வெற்றிப் பாதையிலேயே சென்று கொண்டுள்ளோம்.

எதிர்க்கட்சி என்று ஒன்று இன்றில்லை.

பரவலாக மாகாண சபைத் தேர்தல்களில் தான் வாக்குகள் மிகவும் குறைவாக பாவிப்பது.

எனவே இம் முறை வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையை 65 – 70 சத வீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

TAGS: