துயர் காலத்தில் ஒன்றுபடும் மலேசியர்கள்! – கி.சீலதாஸ்.

1 masஇன,மொழி  அடிப்படையில்  ஒருவர்  அடையாளம்  காணப்படுவது  இயற்கை.உதாரணத்துக்கு,  தமிழ்  மொழியை  தாய்மொழியாகக்  கொண்டவரைத்  தமிழர்  என்கிறோம்.  அதுபோலவே,தெலுங்கைத்  தாய்  மொழியாகக்  கொண்டவரைத்  தெலுங்கர்  என்கிறோம்.  மேலும்  ஒருபடி  போனால்,  சீன,மலாய்,ஆங்கிலம்  போன்ற  மொழியைத்  தாய்  மொழியாகக்  கொண்டவர்களை  முறையே  சீனர்,மலாய்க்காரர்,  ஆங்கிலேயர்  என்கிறோம். நாட்டின்  வழி  பார்க்கும்போது  தமிழராக இருப்பவர்   இந்தியராகவும்,பிறகுமலேசியராக  மாறுவதும்,கண்டங்கள்  வழியாகப்  பார்க்கும்போது    அதே  மனிதர்  ஓர்  ஆசியர்  என்றும்,  உலக   ரீதியாக   பார்க்கும்போது  உலகமனிதர்   என்றும்  பொதுவாகக்   கூறுகிறோம்.

ஒவ்வொரு  கட்டத்திலும்  தாய்  மொழி  பிரதான  நிலையை  வகிப்பதைக் காணலாம்.  மதத்துக்கு   முதலிடம்   தருவது  நாகரிக  சிந்தனைக்கு  ஒவ்வாத  அணுகுமுறை  எனின்  அதில்  நியாயம்   இருக்கிறது.  காரணம்  மதத்தை  வைத்து  மனிதனை எடைபோட  கூடாது,  மாறாக  மனித   நேயத்தை   மையமாக  வைத்துதான்  மனிதனை  எடைபோடவேண்டும்  என்பது  உலகம்  ஏற்றுக்கொண்ட  அடிப்படை உண்மை.  அதனால்தான்  அரசியல்   சட்டம்  கூட  வரையறுக்கப்பட்ட   அடிப்படை   மனித   உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும்   இடம்  கொடுத்த  போதிலும்   குடிமகனின்  பொதுவான  சமஉரிமையை  மறுக்கவில்லை.  சம  உரிமை  நிலவுகிறதா?  என்ற  கேள்வி  எப்போதும்  சர்ச்சைக்குறியதாகவே  இருக்கும்.  அந்தச்  சர்ச்சையை   வளர்ப்பவர்கள்   தங்களின்   தன்னலத்தைப்   பாதுகாத்துக்கொள்ளும்   அரசியல்வாதிகளேயன்றி  சாதாரண மனிதர்கள்  அல்ல.  அதிலும்  குறிப்பாக  சாதாரண  மலேசிய  குடிமக்கள்   அல்ல.

எங்கெல்லாம்  சமத்துவத்துக்கு  உதட்டளவு  முக்கியத்துவம்  கொடுத்து  மனித  நேயம்  புறந்தள்ளப்படுகிறதோ  அங்கெல்லாம்  நியாயம்,  நீதி,  நேர்மை, சட்ட ஒழுங்கு  காண்பது அரிதே.

9.3.2014இல்   எம்ஏஎஸ்  நிறுவனத்தின்  MH 370  விமானம்  காணாமற்போனது.   அதில்  239 பேர்  பயணித்தார்கள்  என்ற  திடுக்கிடும்  செய்தி  நாட்டு  எல்லை,  அரசியல்  எல்லை, இனமத  பேத  எல்லைகளை   எல்லாம்  மீறி  வருத்துகிறது  எனின்  அது  நம்முள்   புதைந்து  கிடக்கும்   மனிதநேயத்தை,  மனிதாபிமானத்தை   வெளிக்கொணருகிறது.  அந்த மனித  உணர்வைத்தான்  9.3.2014இல்  இனமதபேதங்களை  ஒதுக்கிவைத்து  அந்த  காணமற்போன  விமானத்தில்   பயணித்தவர்களின்  நலனுக்காக,பாதுகாப்புக்காகப்  பிரார்த்தனையில்   ஈடுபட்ட  சம்பவம்  அற்புதமான,  மனித நாகரிகத்தை  மதிக்கும்  செயல்  எனலாம்.  இந்தப்  பல்லின  பல  சமயங்கள்  கூடிய  இடம்  பொது  இடம் – அங்கே  சமய  வாரியான  வாதம்  இடம்பெறவில்லை.  எல்லாம்  சமம்  என்ற  உணர்வு  இருந்ததைக்  காணமுடிகிறது.  அந்த  நிகழ்வில்  முன்னாள்   பிரதமர்  துன்  அப்துல்லா  படாவி  கலந்து  கொண்டு  எல்லா   சமயத்தினரோடு   இணைந்து  பிரார்த்தித்தானது  வழிபடுவதற்கு   எல்லையும்  இல்லை,  கட்டடமும்   தேவை  இல்லை   என்பதை   உணர்த்துகிறது.எங்கும் பரவியிருக்கும்   இறைவனுக்கு   மூடுபட்ட  கட்டடம்  தேவையில்லையே!

வரையறுக்கப்பட்ட   சமய  உணர்வோடுதான்  வாழமுடியும்,  சமய   வேறுபாட்டை  வளர்ப்பதால்  மட்டும்  தான் மேன்மை காணமுடியும் என்கின்ற  எண்ணத்தை  தவிடுபொடியாக்கிவிட்டது  துன்  அப்துல்லாவின்   துணிவானச் செயல்.  துயரத்தில்  மட்டும் தான்  மலேசியர்கள்  ஒன்று கூட  முடியும்  என்ற நோக்கத்தை  கைவிட்டு  எல்லா   சூழலிலும் ஒன்றுகூட  முடியும் என்பதை   இந்தபொதுப்  பிரார்த்தனை  உறுதிப்படுத்துகிறது.

துயரத்தில்  ஒன்று  கூடும்  சமயங்கள்  துயரற்ற  நிலையிலும் இந்த   ஒருமைப்பாட்டைப்   பேணி  வளர்த்துக்கொண்டால்  நல்லதல்லவா..?  மனிதநேயம்   வளரவேண்டும்.  மனித  உணர்வு   பலம்பெறவேண்டும்.  இவையே நம்  அடிப்படைகுறிக்கோள்களாக  இருக்கவேண்டும்.