நன்றி இளஞ்செழியன், ஆனால் சில கேள்விகள் – தமிழினி

Preschool2மதிப்பிற்குறிய இளஞ்செழியன் அவர்களுக்கு, செம்பருத்தியில் வெளிவந்த பாலர்கல்விக்காக ஸ்ரீமுருகன் நிலையதிற்கு ரிம 28 மில்லியன் கொடுக்கப்பட்டதா’  என்ற தலைப்பிலான கட்டுரையைப் படித்தேன். அண்மையில், ‘தற்காலிக நடைமுறை தாக்குப்பிடிக்காது. பாலர்கல்விக்கு அரசியல் முடிவுதான் வழிமுறை’ என்ற தலைப்பிலான எனது கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துப் பிழைகளைச் சுட்டிக் காட்டியிருந்தீர்கள். அதற்காக முதலில் எனது நன்றி.

அரசாங்கம் பாலர்ப்பள்ளியில் பயிலும் ஒரு மாணவனுக்கு ஓர் மாதத்திற்கான சராசரி செலவு 300 ரிங்கிட் என கணக்கிட்டுள்ளது என்று இடம்பெற்றிருக்க வேண்டும். அந்த நிலையில் நமது 30,000 மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கு பாலர்க்கல்வியை வழங்க 9 மில்லியன் தேவைப்படும் என்பதே சரியாகும். அந்த வகையில், ஓராண்டுக்கு ஒரு மாணவனுக்கான சராசரி செலவு 3,600 ரிங்கிடிலிருந்து 4,000 ரிங்கிட் ஆகும். அந்த வகையில் பார்த்தோமானால் நீங்கள் கூறியிருப்பதுபோலவே ஓர் ஆண்டுக்கான மொத்த செலவு 108 முதல் 120 மில்லியன் ஆகும்.

விளக்கம் வேண்டும்

elanjeliyanமேலும், உங்கள் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் சிலவற்றுக்கு மேலதிக விளக்கங்கள் கோருகிறேன். பாலர்க்கல்வி பெற 30,000 இந்திய மாணவர்களில் 8,000 பேர் அரசாங்க பாலர்ப்பள்ளிகளில் பயில்வதாக கூறியிருந்தீர்கள். தமிழ்ப்பள்ளிகளில் இருக்கும் 176 பாலர்ப்பள்ளிகள் 4800 மாணவர்கள் மட்டுமே பயில்கிறார்கள். மீதம் 3200 மாணவர்கள் எந்த அரசாங்க பாலர்ப்பள்ளிகளில் பயில்கிறார்கள்? Kemas, Perpaduan போன்ற அரசாங்க பாலர்ப்பள்ளிகளில் பயில்வதாக வைத்துக் கொள்வோம். தமிழை அறவே கற்பிக்காத அந்த பாலர்ப்பள்ளிகள் எப்படியான ஒரு முன்கல்வியை தமிழை மட்டுமே தன் வீடுகளில் பேச்சு மொழியாக கொண்ட ஒரு மாணவனுக்கு உதவ முடியும்?

பாலர்பள்ளி நிலையில் என்னுடைய விவாதம் என்பது இதுதான். தொடக்கக் கல்வி, இடைநிலைக்கல்வியைப் போல பாலர்க்கல்வியும் அடிப்படைக் கல்விதான். இதை அரசாங்கமும் நன்கு உணர்ந்திருக்கிறது. ஆனால், நமது தமிழ்ப்பள்ளிகள் விடயத்தில் மட்டும் முரண்டு பிடிக்கிறது. பாலர்க்கல்வியைத் தர வேண்டியது அரசாங்கத்தில் கடமை. கல்வியமைச்சி நடத்தும் அரசாங்கப் பள்ளிகளிலேயே ஒரு மாணவனுக்கான சராசரி செலவு 4,000 ரிங்கிட் என்றால் சராசரி அல்லது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெற்றோரால் எப்படி தனது பிள்ளைகளுக்கு அடிப்படை பாலர்க்கல்வியை வழங்க முடியும்! வறுமையைக் காரணமாக காட்டி கல்வி மறுக்கப்படுவது சரியான ஒன்றாகுமா?

தமிழ் கல்விக்கு உகந்த பாலர்கல்வி

Tamil 2ndary school - MPSஇன்று வரை 70 விழுக்காட்டு சராசரி குடும்பங்களைச் சார்ந்த –வறுமை நிலையில் வாழும் பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புகின்றனர். இதை யாரும் மறுக்க முடியாது. அவர்களால் பாலர்க்கல்விக்கு மாதம் 50 வெள்ளி செலவழிக்க வாய்ப்பிருக்கலாம். மேலும், அவர்கள் போக்குவரத்து கட்டணத்தை வேறு செலுத்த வேண்டும். இதை எல்லாவற்றையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆக, எல்லா தமிழ்ப்பள்ளிகளிலும் பாலர்ப்பள்ளியை அமைக்க அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும்.

தமிழ்ப்பள்ளிகளின் திட்ட வரைவுக் குழு 300 தமிழ்ப்பள்ளிகளில் பாலர்க்கல்வி அமைக்க திட்டம் கொண்டிருப்பதாக எழுத்தியிருந்தீர்கள். எப்போது எந்தெந்த காலக்கட்டத்தில் எந்தெந்த பள்ளிகளில் எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு செலவில் இந்த பாலர்ப்பள்ளிகளில் நிர்மாணிக்கப்பட விருக்கின்றன? எப்போது இந்த திட்டத்தை வெளியிட போகிறீர்கள்? இந்த 300 என மொத்தமாக கணக்கு சொல்வதை விடுத்து  விரைந்து விளக்கத் திட்டத்தை சமர்ப்பிக்கும்படி பேராசிரியர் இராஜேந்திரன் தலைமையிலான குழுவிடம் கேட்டுக் கொள்கிறோம்.

 ஸ்ரீமுருகன் நிலையமும் பாலர்கல்வியும்

ஸ்ரீமுருகன் நிலையத்திற்குப் பாலர்ப்பள்ளி திட்டத்திற்காக 28 மில்லியன் கிடைத்திருப்பதாக நானும் கேள்விப்பட்டேன். இதுவரை நாட்டில் சிறந்த மாணவர்களுக்காக நன்கொடை என்ற பெயரில் கட்டணம் வசூலித்துக் கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொண்டிருந்த ஸ்ரீ முருகன் நிலையம் பாலர்ப்பள்ளி நடத்துவது கொஞ்சம் வேடிக்கையாக இருந்தாலும் இது உண்மை என்றால் தான்ஸ்ரீ தம்பிராஜா விரைவில் தாங்கள் நடத்தி வரும் பாலர்ப்பள்ளிகள் குறித்த விபரங்களை வெளியிட வேண்டும்.