போலீஸ் தடுப்பு காவலில் பாலியல் தொல்லையா?

போலீஸ் காவலில் தாங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது பாலியல் ரீதியில் தொல்லை கொடுக்கப்பட்டதாக பி.எஸ்.எம் எனப்படும் மலேசிய சோஷலிஸ்ட் கட்சியின் மூன்று பெண் உறுப்பினர்கள் நேற்றுமுன்தினம் புக்கிட் அமானில் புகார் செய்தனர்.

இந்த செய்தியைப் படித்தபோது “போலீசார் பொதுமக்களின் பாதுகாவலர்கள்” என்ற வாக்கியம்தான் என் போன்றவர்களின் சிந்தனையை கிளறிவிடுகின்றது.

போலீசார் பொதுமக்களின் பாதுகாவலர்கள் என்பது உண்மையானால் தடுப்புக் காவலில் கைது செய்யப்படுகின்ற பொதுமக்களுக்குக் குறிப்பாக பெண்களுக்கு ஏன் பாலியல் ரீதியான இந்தக் கொடுமைகள் இழைக்கப்படுகின்றன.

இத்தகைய கேடுகெட்ட செயலுக்கு என்ன காரணம்? யார் பொறுப்பேற்பது? இது சட்டரீதியானதா? அல்லது சிலரின் விஷமத்தனமான காரியமா? இல்லை; இது இனம் பார்த்து இழைக்கப்படுகின்ற கொடுமைகளா?

இதற்கு போலீசார் என்ன மறுமொழி தயாராக வைத்திருக்கின்றனர்? இதன் பின்னணி என்ன? ஏன் இப்படியெல்லாம் நடைபெறுகின்றன. போலீசார் தடுப்புக்காவலில் கைது செய்யப்படுகிறவர்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதமில்லையா? ஏன் இந்த மனிதத் தன்மையற்ற செயல்?

போலீசாரின் மேல் எப்படி பொதுமக்களுக்கு மதிப்பு ஏற்படும்?

பாலியல் ரீதியாக நடத்தப்படும் இத்தகைய அநாகரீகமான காட்டுமிராண்டித்தனம் உடனே நிறுத்தப்பட வேண்டும்.

அதற்கு போலீஸ் தலைமை ஆணையர் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் இதே போன்று மேலும் நடைபெறாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். செய்வாரா?

– மூர்த்தி, கோலாலம்பூர்