‘கெட்கோ’ முடிச்சு அவிழ்க்கப்படுகிறது!

IMG_201708236_110113

முடிச்சுக்கு மேல் முடிச்சு விழுந்த கெட்கோ சிக்கல் மெல்ல அவிழ்க்கப்படுகிறது! முதன் முதலில் கருப்பண்ணன் கம்பெனிதான், இந்த கெட்கோ விவகாரத்தில் முதல் முடிச்சைப் போட்டது; தொடர்ந்து அடுத்தடுத்து போடப்பட்ட முடிச்சுகளை அவிழ்க்கும் பணி தற்பொழுது தொடங்கிவிட்டது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கெட்கோ நில மேம்பாட்டுத் திட்டம் சம்பந்தப்பட்டப் பிரச்சினையில் நீண்டகாலத் துயில் கொண்டிருந்தாலும், தற்பொழுது அதிரடியில் இறங்கியிருப்பதால், கெட்கோ நிலக் குடியேற்றக்காரர்கள் தம் உள்ளத்தில் நம்பிக்கை ஒளி பிறக்க, விழிகளை அகல விரித்து ஆச்சரியம் மேலிட உற்று நோக்குகின்றனர்.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் முகமாக இதில் தொடர்புடைய இரு டத்தோ-க்களை ஊழல் தடுப்பு ஆணையம் தடுத்து வைத்துள்ளது. முன்னதாக, கடந்த 18-ஆம் நாள் இதன் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கெட்கோ தொடர்பில் முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 68 வயதான அவ்வாடவர்தான், இந்த நிலப் பரிவர்த்தனையில் தரகராக செயல்பட்டிருக்கிறார்.

அவரின் கட்டுக் காவல் நீடிக்கும் நிலையில் தற்பொழுது 54, 58 வயதுடைய இவ்விரு சகோதரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கிள்ளான் பள்ளத் தாக்கில் பிரபலமான ஒரு குடும்ப நிறுவன குழுமத்தில் அடங்கியுள்ள இரு நிறுவனங்களின் தலைமை நிருவாக அதிகாரிகளாக சம்பந்தப்பட்ட இரு டத்தோக்களும் பணியாற்றும் நிலையில், இன்று சம்பந்தப்பட்ட இருவரும் புத்ராஜெயா நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்படவுள்ளதாக நீதித் துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், இந்த நிலத்தை குடியேற்றக்காரர் மேம்பாட்டுத் திட்டமாக அறிவித்தபொழுது,  468 பேர் ஆளுக்கு 7,500 வெள்ளி வீதம் செலுத்தி இந்தத் திட்டத்தில் இணைந்தனர். இருந்தபோதும், கெட்கோ-வை நிருவகித்தவர்களின் நிர்வாகக் குளறுபடியால், இந்தத் திட்டம் தரை தட்டிய கப்பலின் நிலைக்கு ஆளானது. கரும்பு பயிரிடும் நிலத்திற்கு மூவாயிர வெள்ளி, ஓர் ஏக்கர் வீட்டு மனைக்காக மூவாயிர வெள்ளி, தண்ணீர் வசதி மற்றும் மேம்பாட்டுப் பணிக்காக 1,500 வெள்ளி யென்று ஏழாயிரத்து ஐந்நூறு வெள்ளி கட்டிய குடியேற்றக்காரர்களைக் பற்றியெல்லாம் கவலைப்படாத அன்றைய கெட்கோ நிருவாகம் யூ.ஏ.பி. மற்றும் நெதர்லாண்ட்ஸ் ஃபைனான்ஸ் கம்பெனி ஆகிய நிதி நிருவனங்களில் இருந்து பெற்ற மில்லியன் கணக்கான கடனைப் பற்றியும் கவலைப்படாமல் ஏறக்குறைய திவால்  நிலைக்குக் கொண்டு சென்று,  அப்படியே கைவிட்டு விட்டது.

அந்த சமயத்தில் கெட்கோ நிலத்தில் பராமரிப்புப் பணியை மேற்கொண்டிருந்த மராமத்து நிறுவனமான கருப்பண்ணன் டிரேடிங் கம்பெனி தனக்கு வர வேண்டிய இலட்சக் கணக்கான நிலுவைத் தொகைக்காக நிதிமன்றத்தை நாடி, கெட்கோவை திவால் நிறுவனமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கச்செய்தது.

இப்படிப்பட்ட நிலையில்தான் சிங்கம் & யோங் நிறுவனம் இதில் தலையிட்டது. தரகராக செயல்பட்ட இந்த நிறுவனமும், குடியேற்றக்காரர்களின் நலனைப் பற்றி அக்கறைப் படாமல், கெட்கோ நிலத்தை தற்பொழுது பராமரிக்கும் தாமரை குழுமத்திற்கு சந்தை மதிப்பிற்கு மிகவும் கீழான மதிப்பீட்டில் அடிமாட்டு விலையில் பரிவர்த்தனை செய்த செய்தி யெல்லாம் செம்பருத்தி வாசக பெருமக்கள் அறிந்ததுதான்.

மலேசிய இந்திய தோட்டப்பாட்டாளி சமூகத்தில் அண்மைய ஆண்டுகளாக மிகவும் சலசலப்பை ஏற்படுத்திய இந்தச் சிக்கல் குறித்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்  கடந்த ஆண்டு விசாரணையை முடுக்கிவிட்டது. ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் கெட்கோ குடியேற்ற மக்களை நேரில் சந்தித்தது, நெகிரி செம்பிலான் மாநில தலைமை அலுவலகம்-நெகிரி செம்பபிலான் மேம்பாட்டுக் கழகம, கணக்காய்வாளர் நிறுவனமான சிங்கம் & யோங்-தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்- தாமரை ஹோல்டிங்க்ஸ் குழுமம் ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியது ஆகிய நடவடிக்கையில் அடிப்படையில் மிக அண்மையில் இந்த இரு டத்தோக்கள் கைதும் நடந்துள்ளது.

எது எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.