உலக வங்கித் தலைவர் ராஜினாமா! : டிரம்பின் விருப்பத்துக்கு ஏற்ப புதிய தலைவர்?

உலக வங்கியின் தலைவராக இதுவரை செயலாற்றி வந்த ஜிம் யாங் கிம் என்பவர் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் விருப்பத்துக்கு ஏற்ப புதிய உலக வங்கித் தலைவரை நியமிக்கும் சூழல் தோன்றியுள்ளது. உலக வங்கியின் மிகப்பெரிய உறுப்பு நாடு அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

உலக வங்கியை ஆட்டிப் படைக்கும் நிலை அமெரிக்காவிடம் சிக்கினால் உலக அளவில் ஏற்கனவே மறைமுகமாக நடந்து வரும் வணிக யுத்தம் தீவிரமடையும் நிலை தோன்றலாம் என உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. 2 ஆம் உலகப் போருக்குப் பின்னர் தொடங்கப் பட்ட உலக வங்கி தற்போது 189 உறுப்பு நாடுகளுக்கு நிதி உதவி அளிக்கும் மிகப்பெரிய அமைப்பாக இருந்து வருகின்றது. 2011 ஆமாண்டு முதல் இதன் தலைமைப் பொறுப்புக்கு வந்த ஜிம்மின் பதவிக் காலம் 2016 முடிவடைந்த போதும் 2 ஆவது முறையாகவும் அவர் தலைவராக அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவால் நியமிக்க பட்டார்.

இவரின் அதிகாரம் 2022 ஆமாண்டு தான் முடிவுக்கு வருகின்றது என்ற போதும் இந்த மாத இறுதியுடன் தான் பதவி விலகுவதாக ஜிம் யாங் கிம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரின் பதவி விலகலை அடுத்து உலக வங்கியின் தலைமைச் செயலதிகாரியான கிறிஸ்டாலினா ஜார்ஜிவியா பெப்ரவரி முதலாம் திகதி முதல் கூடுதல் பொறுப்பை வகிப்பார் என உலக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

-4tamilmedia.com