35 நாட்கள் நீடித்த அமெரிக்க அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வந்தது!

35 நாட்களாக நீடித்து வந்த அரசு துறைகள் முடக்கத்தில் நேற்று முன்தினம் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

அமெரிக்காவில் 35 நாட்கள் நீடித்த அரசு துறைகள் முடக்கம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

அண்டை நாடான மெக்சிகோ வழியாக அமெரிக்காவினுள் நுழைகிறவர்களை தடுக்கிற விதத்தில் எல்லையில் பிரமாண்ட தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்பது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் கனவுத்திட்டம். அதுமட்டுமின்றி இது அவரது தேர்தல் வாக்குறுதியும் ஆகும்.

இந்த தடுப்புச்சுவர் கட்ட மெக்சிகோ பணம் தர மறுத்து விட்ட நிலையில், உள்நாட்டு நிதி 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40 ஆயிரத்து 540 கோடி) வழங்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தை ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

ஆனால் ஜனநாயக கட்சி, டிரம்பின் இந்த திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. மக்களின் வரிப்பணத்தை, தடுப்புச்சுவர் கட்ட வழங்க முடியாது என்று அந்த கட்சி கூறுகிறது.

இதன்காரணமாக செலவின மசோதாவை நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றிய டிரம்ப் அரசால், செனட் சபையில் நிறைவேற்ற முடியவில்லை. இதன் காரணமாக வெளியுறவு, உள்நாட்டு பாதுகாப்பு, போக்குவரத்து, விவசாயம், நீதித்துறை உள்ளிட்ட 9 துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு இல்லாததால், அவை கடந்த மாதம் 22-ந் தேதி முதல் முடங்கின.

அமெரிக்க வரலாற்றில் நீண்ட காலம் அரசுத்துறைகள் முடங்கியது, இதுவே முதல்முறை என சொல்லப்படுகிறது. அரசுத்துறைகளின் முடக்கம் காரணமாக அமெரிக்க பொருளாதாரத்துக்கு சுமார் 6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.42 ஆயிரத்து 600 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் 35 நாட்களாக நீடித்து வந்த அரசு துறைகள் முடக்கத்தில் நேற்று முன்தினம் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இந்த முடக்கத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வர ஏதுவாக ஒரு ஒப்பந்தத்துக்கு டிரம்ப் உடன்பட்டார்.

இதன்படி அரசுத்துறைகள் 21 நாட்கள் செயல்படுவதற்கு ஏற்ற வகையில் (அடுத்த மாதம் 15-ந் தேதி வரை) தற்காலிக செலவின மசோதா, நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு டிரம்ப் உடனடியாக ஒப்புதல் வழங்கினார்.

இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்த முடிவு, எந்த விதத்திலும் சலுகை இல்லை. அரசுத்துறைகள் முடக்கத்தால் மிகவும் பாதிப்புக்குள்ளான லட்சக்கணக்கான மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு இது. எல்லைச்சுவர் விவகாரத்தில் மக்கள் எனது வார்த்தைகளுக்கு செவிகொடுப்பார்கள் என கருதுகிறேன். இதில் 21 நாட்களில் ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், மீண்டும் அரசுத்துறைகள் முடங்கும்” என கூறி உள்ளார்.

அவர் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டியும் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்த ஒப்பந்தத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இது பிப்ரவரி 15-ந் தேதி வரையிலான அரசுத்துறைகளின் தேவைக்கு நிதி அளிக்கும். அரசியல் குழப்ப நிலையால், மத்திய அரசு ஊழியர்கள் பாதிப்புக்கு ஆளானார்கள். அவர்கள் தேசபக்தர்கள். அவர்களுக்கு முழுச்சம்பளமும் தரப்படும்” என கூறினார்.

அதேநேரத்தில் நெருக்கடி நிலை அறிவிக்கும் வலிமை வாய்ந்த மாற்றுத்திட்டத்தை நான் இன்னும் கையில் எடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் அமெரிக்க ராணுவத்துக்கான நிதியை அவர் எல்லைச்சுவர் கட்டுவதற்கு பயன்படுத்த முடியும். ஆனால் அது அரசியல் சாசன ரீதியிலும், சட்ட ரீதியிலும் சவால்களாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக, “ எல்லையில் பலமிக்க சுவர் அல்லது உருக்கிலான தடையை ஏற்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை” என்றும் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

-athirvu.in