நாகேந்திரனின் உயிரைக் காப்பாற்ற மனு – எம்னெஸ்டி தொடங்கியது

நவம்பர் 10-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள மலேசிய நாகேந்திரன் கே தர்மலிங்கத்தின் மரண தண்டனையை நீக்குமாறு, சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பை வலியுறுத்தும் வகையில், மனித உரிமைகள் குழுவான எம்னெஸ்டி இன்டர்நேஷனல் மலேசியா இயங்கலை மனு பிரச்சாரத்தைத் தொடங்கியது.

தண்டனையை முற்றிலுமாக இரத்து செய்வதற்கான நடவடிக்கையாக, அனைத்து மரண தண்டனைகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் அது அழைப்பு விடுத்துள்ளது.

“மனித உயிரை எடுப்பது ஒரு கொடூரமானச் செயல், ஆனால் போதைப்பொருள் கடத்தியதற்காக மட்டுமே தண்டனை பெற்ற ஒருவரைத் தூக்கிலிடுவது, அதுவும் அவர் என்ன நடந்தது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளார் என்ற சான்றுகளுக்கு மத்தியில், இது வெறுக்கத்தக்கது,” என்று அக்குழு நேற்று கீச்சகத்தில் கூறியது. குற்றம் செய்தபோது நாகேந்திரன் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார் என்ற செய்திகளையும் அது குறிப்பிட்டது.

எம்னெஸ்டி இன்டர்நேஷனல் தனது இணையதளம் மூலம், தண்டனையைக் குறைக்கவும், மரணதண்டனையை நிறுத்தவும் கோரி ஹலிமாவிடம் முறையீடு செய்யுமாறு பொதுமக்களை வலியுறுத்தியது.

42.72 கிராம் ஹெரோயின் கடத்தியதற்காக, நாகேந்திரனுக்கு 2010-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூர் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகேந்திரன் குற்றத்தைச் செய்யும்போது மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்படவில்லை என்றும், அவர் செய்வது குற்றம் என்பதைப் புரிந்துகொண்டதாகவும் கூறியது.

எவ்வாறாயினும், நாகேந்திரன் அறிவுசார் செயல்பாடு பிரச்சனைகள் மற்றும் அதிவேகத்தன்மை மற்றும் கவனக்குறைவு கோளாறு (ADHD) ஐ.கியூ. மதிப்பெண் 69 மட்டுமே மற்றும் பலவீனமான செயல் திறன் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்ப வழக்கறிஞர் என் சுரேந்திரன் கூறினார்.

முன்னதாக, நேற்றிரவு வரை 54,000 -க்கும் மேற்பட்ட கையெழுத்துகளைப் பெற்ற நாகேந்திரனை மன்னிக்குமாறு ஹலிமாவை வலியுறுத்துவதற்காக இயங்கலையில் மற்றொரு மனு பிரச்சாரம் தொடங்கப்பட்டது.

எனினும், மன்னிப்பு கோரி ஹலிமாவிடம் கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான மனு வெற்றிபெறவில்லை.