MACC -யின் அச்சுறுத்தலில் எனது ஊழியர்கள், மஸ்லீ குற்றம் சாட்டுகிறார்

சிம்பாங் ரெங்கம் எம்பி மஸ்லீ மாலிக், எம்ஏசிசி தலைவர் அசாம் பாக்கிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, எம்ஏசிசி அதிகாரிகள் தனது ஊழியர்களுக்கு எதிராக மிரட்டல் தந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

“நான் மிரட்டப்படுகிறேன் என்பதை கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறேன்”

“எம்ஏசிசி அதிகாரிகள் சிம்பாங் ரெங்கமில் உள்ள எனது ஊழியர்களையும், எனக்கு(கடந்த காலத்தில்) உதவியவர்களையும்  மிரட்டுகின்றனர்” என்று மஸ்லீ கூறினார்.

சிம்பாங் ரெங்காமின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், கல்வி அமைச்சராக அவர் பணியாற்றியபோதும் அவர் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக, தனக்கு எதிராக அளிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் எம்ஏசிசி அதிகாரிகள் தன்னை விசாரணை செய்ததாக மஸ்லீ கூறினார்.

“எனக்கு எதிராக ஒரு குற்ற அறிக்கை (உருவாக்கப்பட்ட) இருப்பதாக அவர்கள் (MACC அதிகாரிகள்) சொன்னார்கள்”

“கல்வித் திட்டங்கள், மக்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் போன்றவை எவ்வகையில் தவறானவை?”

“எம்ஏசிசிக்கு இது குற்றமா? நம் நாடு எங்கே போகிறது?,” என்று அவர் கூறினார்.

” டாங் வாங்கி மாவட்ட காவல் நிலையத்திற்கு வெளியே இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கேள்வி எழுப்பினார்.

ஜனவரி 20 அன்று பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே நடைபெற்ற பிகேஆர் இளைஞர்கள் மற்றும் மூடா நடத்திய ஆர்ப்பாட்டங்களில் மஸ்லி ஈடுபட்டது தொடர்பாக அமைதியான பேரணி சட்டம் 2012 இன் கீழ் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

அவர் வழக்கறிஞர் ரோஜர் சான் வெங் கெங் உடன் இருந்தார், மேலும் விசாரணையின் போது கண்ணியமாக  செயல்படுமாறு போலீசாரிடம் கூறினார்.

மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் தலைவரான அசாம், 2015 மற்றும் 2016 க்கு இடையில் பொதுவில் பட்டியலிடப்பட்ட இரண்டு நிறுவனங்களில் பங்கு வைத்திருப்பது குறித்து அதிக கவனத்தைப் பெற்றார்.

மஸ்லீயைத் தவிர, லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபஹ்மி ஃபட்சில் மற்றும் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் மரியா சின் அப்துல்லா ஆகியோர் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பிகேஆர் இளைஞரின்  கோரிக்கைகளில், எம்ஏசிசி தலைவர் பதவியில் இருந்து அசாமை இடைநீக்கம் செய்வதும், ஊழலை விசாரிக்க ராயல் விசாரணை கமிஷன் (ஆர்சிஐ) அமைக்கப்பட வேண்டும் என்பதும் ஆகும்.