சிலாங்கூர் அரசாங்கம் முட்டை விலையை குறைக்க உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது

சிலாங்கூர் அரசாங்கம் மாநிலத்தில் உள்ள கோழி முட்டை உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இது  முட்டை விலையை சந்தை விலைக்குக் கீழே குறைக்கும் முயற்சியாகவும், மே மாதம் ஐடில்பித்ரி கொண்டாட்டம் வரை போதுமான அளவு முட்டைகள் தேவையை உறுதி செய்வதற்கான தயாரிப்பின் ஒரு பகுதியாகவும் உள்ளது.

வேளாண்மைச்  தொழில் குழுத் தலைவர் இஷாம் ஹாஷிம், கோழி முட்டை உற்பத்தியாளர்களுக்கு உதவுவதற்கான பல்வேறு முறைகள் விவாதிக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக கோழி முட்டைகளின் விலை குறைக்கப்படுவதை உறுதி செய்ய இயன்றதை செய்வதாக  கூறினார்.

“கோழி முட்டைகளின் விலை, தற்போதைய உச்சவரம்பு விலையை விட மிகக் குறைந்த அளவில் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். சிலாங்கூரில், இதுவரை, சப்ளை குறைக்கப்படவில்லை ஆனால் விலை அதிகமாக உள்ளது.”

“சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகத்தின் (PKPS) கீழ் Ehsan Food Prices Intervention சந்தைப்படுத்தப்படுவதற்கு முன், இந்த வாரம் கோழி முட்டைகளின் தரத்தின்படி விலை நிர்ணயம் செய்யப்படும்”,  ஷாலாமில் நேற்று இரவு நடந்த சிலாங்கூர் அக்ரோ ஐகான் விருதுகளுக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கிடையில், சிலாங்கூர் மொத்த விற்பனை சந்தை மற்றும் விஸ்மா பிகேபிஎஸ் ஆகிய இரண்டு  கடைகளில் உச்சவரம்பு விலைக்குக் கீழே விற்பனை செய்யப்படும் மீன் மற்றும் மாட்டிறைச்சியின் விநியோகம் அதிகரிக்கும் என்று இஷாம் கூறினார்.

பி.கே.பி.எஸ் கடைகளைத் தவிர, மாநிலம் தழுவிய அளவில் இந்த முயற்சி விரிவுபடுத்தப்படும் என்றும், இத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்த விலையில் அதிக மக்கள் பயனடைய முடியும் என்றும் அவர் கூறினார்

கடந்த சனிக்கிழமை, பிகேபிஎஸ் மூலம் சிலாங்கூர் அரசாங்கம் Ehsan Food Prices Intervention  உணவு விலை திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியது, தற்போதைய உணவுப் பொருட்களின் விலை உயர்வை எதிர்கொள்ளும் முயற்சியில் கோழியின் உச்சவரம்பு விலையை ஒரு கிலோவுக்கு RM8 என நிர்ணயித்தது.