நெங்கிரி அணை திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் – வேதமூர்த்தி

கிளந்தான், குவா முசாங்கில் உள்ள நெங்கிரி நீர்மின் அணைத் திட்டத்தை ரத்து செய்யுமாறு முன்னாள் ஒற்றுமைத்துறை அமைச்சர் வேதமூர்த்தி அரசாங்கத்தை வலியுறுத்தினார், ஏனென்றால் இந்த  திட்டத் தளம் அங்குள்ள ஒராங் அஸ்லி சமூகத்திற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார்.

இந்த மலேசிய முன்னேற்றக் கட்சித் தலைவர், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் ஐக்கிய அமைச்சராக இருந்தபோது, ​​அதன் சாத்தியமான சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பழங்கால ஒராங் அஸ்லி குடியேற்றத்தின் அழிவைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டம் மறுபரிசீலனை செய்யப்பட்டதாகக் கூறினார்.

“தேசிய அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குநரான ஆதி தாஹா நடத்திய பாரம்பரிய தாக்க மதிப்பீடு HIA 8,000 முதல் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள பழங்கால குகை தளங்களில் எலும்புக்கூடு எச்சங்கள் கண்டுபிடிக்க வழிவகுத்தது,எனவே அதற்கான ஆய்வுகள் தேவை,” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

நம் நாடு தனது சொந்த பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் படிக்கவும் விரும்புகிறதா அல்லது அணைத் திட்டத்திற்காக “தன் பூர்வீகத்தை சமரசம்” செய்ய விரும்புகிறதா என்றும் வேதா கேள்வி எழுப்பினார்.

குவா முசாங்கில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் ஒராங் அஸ்லி சமூகத்தினரின் உரிமைகளைப் பாதுகாப்பதோடு, அவர்களின் பூர்வீக நிலமாகக் கருதப்படும் பகுதியை வர்த்தமானியில் வெளியிட பரிசீலிக்குமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

எரிசக்தி தேவைகள் மற்றும் வெள்ளப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண மாற்று வழிகளை ஆராய புத்ராஜெயாவுக்கு அழைப்பு விடுத்தார்.

“ஓராங் அஸ்லி சமூகத்தினர் நீண்டகாலமாக குறுகிய நோக்கற்ற திட்டமிடல் மற்றும் பேராசையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கூட்டாட்சி அரசியலமைப்பின்படி  ஒவ்வொரு மலேசியருக்கும் வழங்கப்பட்டுள்ள சம மரியாதை மற்றும் அணுகலுக்கு அவர்கள் தகுதியானவர்கள், ”என்று அவர் கூறினார்.

அணை திட்டம் தொடரும்,அதை ரத்து செய்ய எந்த காரணமும் இல்லை என்று என்று புத்ராஜெயா அறிவித்ததை அடுத்து, வேதா இவ்வாறாக பதிலளித்துள்ளார்.

இந்த திட்டம் மின்சார ஜெனரேட்டர், வெள்ளம் தணிப்பு மற்றும் சுத்தமான நீர் ஆதாரம் என மூன்று முக்கிய நோக்கங்களை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இந்த அணை சுற்றுச்சூழல் சுற்றுலாவை ஊக்குவிக்கும் என்று எரிசக்தி மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் தகியுதீன் ஹசன் கூறினார்.

பல முந்தைய ஆய்வுகளின் அடிப்படையில் பதிலளித்தவர்களில் 80 சதவீதத்திற்க்கும் அதிகமானோரின் ஆதரவை இந்தத் திட்டம் பெற்றுள்ளது என்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு EIA, சமூக தாக்க மதிப்பீடு SIA மற்றும் HIA ஆகியவை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அரசாங்கம் மற்றும் தெனாகா நேஷனல் பெர்ஹாட் வழங்கும் நிதியுதவியுடன், மூன்று கிராமங்களில் ஓராங் அஸ்லி சமூகத்தை மீள்குடியேற்ற இந்த திட்ட அமலாக்கத்தை உள்ளடக்கியதாக தகியுதீன் கூறினார்.

“அவர்களுக்கு வீடுகள் மட்டுமின்றி, பண்ணைகள் மற்றும் பிற வசதிகளும் வழங்கப்படும்,” என்று அவர் கூறினார்.

இத்திட்டத்தை நிர்மாணிப்பது அப்பகுதியில் உள்ள ஒராங் அஸ்லி மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் என்று திட்டத்திற்கு எதிரான கட்சிகளின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவரது அறிக்கை வெளியிடப்பட்டது.

ஜூன் 7 அன்று, குவா முசாங்கைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஒராங் அசால் மக்கள் புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலக வளாகத்தின் முன் கட்டுமானத் திட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

FMT