விசாரணையில் உள்ளவர்கள் பொது தேர்தலில் பங்கெடுக்க தடையில்லை – அமைச்சர்

நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளவை உட்பட, எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களுக்குப் புதிய நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்பட மாட்டாது,  என்று வான் ஜுனைடி டுவான்கு ஜாஃபர்(Wan Junaidi Tuanku Jaafar) கூறினார்.

ஊழல் வழக்கு விசாரணையில் உள்ளவர்கள் போட்டியிடுவதைத் தடுக்குமாறு பாஸ் தலைவர் அஹ்மத் யஹ்யாவின் யோசனைக்குப் பிரதமர் துறையின் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) அமைச்சர் பதிலளித்தார்.

“ஜனநாயகத்தை நிலைநிறுத்த, எந்தவொரு தனிநபரும் போட்டியிடுவதைத் தடுக்க புதிய நிபந்தனைகளைச் சேர்க்கத் தேவையில்லை”.

“உதாரணமாக, நீதிமன்றத்தில் வழக்குகளுள்ள நபர்கள் போட்டியிட தகுதியற்றவர்கள் என்று சட்டங்களை இயற்ற இயலாது ,” என்று வான் ஜுனைடி (மேலே) இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

மத்திய அரசமைப்புச் சட்டத்தின் 48(1)(இ) யில் கூறப்பட்டுள்ளபடி வேட்பாளர்களை முன்னிறுத்துவதற்கு தற்போதுள்ள நிபந்தனைகள் போதுமானது என அவர் மேலும் கூறினார்

பிரிவு 48(1)(e) கூறுகிறது, ஒரு நபர் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு குறையாத சிறைத்தண்டனை அல்லது RM2,000 அபராதம் விதிக்கப்பட்டால், அந்த நபர் (மன்னிப்பைப் பெறதாவர்)  போட்டியிட தகுதியற்றவர்.

நாடாளுமன்றத்தின் எந்தவொரு சபைக்கும் எவரேனும் ஆட்களை நியமனம் செய்தல், தெரிவு செய்தல் அல்லது நியமிப்பது தொடர்பான உறுப்பு உரை 48(5) வும் உள்ளது.

எனவே, தற்போதுள்ள நியமன நிபந்தனைகளைக் கடுமையாக்க வேறு நிபந்தனைகளைச் சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்று நான் நம்புகிறேன்.

“இது சேர்க்கப்பட்டால், நியமன செயல்முறை சிக்கலானதாக இருந்த 90 களின் சகாப்தத்திற்கு அது நம்மை மீண்டும் கொண்டு வரும்”.

“தற்போதுள்ள சட்டங்களை நாங்கள் குறிப்பிடுவது நியாயமானது, அவை உண்மையில் முழுமையானவை மற்றும் தேர்தல் வேட்பாளர் நியமன செயல்முறைக்குப் போதுமானவை,” என்று வான் ஜுனைடி கூறினார்.

எம்.பி.யாக இருந்து தகுதி நீக்கம்

தண்டிக்கப்பட்ட, ஆனால் இதுவரை மன்னிப்பு கிடைக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கையாளும் 48 (4) வது பிரிவுக்கு இணங்காத நிலையில், தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை என்றும் அமைச்சர் விளக்கினார்.

பிரிவு 48(4)(c) இன் படி, மன்னிப்பு செயல்முறை தோல்வியுற்றால் மட்டுமே எம்.பி.யின் பதவி பறிக்கப்படும்.

கடந்த வார இறுதியில், PAS முக்தாமரின்போது, ​​நாட்டின் நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும், சிறப்பு சலுகைகளைக் கேள்விக்குள்ளாக்கும் மற்றும் ஊழலுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களைத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதி நீக்கம் செய்யுமாறு அஹ்மத் யாஹ்யா பரிந்துரைத்தார்.

“அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தல், ஊழல் செய்தல் மற்றும் பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதற்காக விசாரணையில் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும். அவர்கள் தங்கள் பதவியைப் பயன்படுத்தி முயற்சி செய்யாமல் இருக்கக்கூடும் என்று நாங்கள் கவலைப்படுவதால், அவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது.

“இந்த அம்சத்தில், அரசியல் கட்சித் தலைவர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகளை நீதிமன்றத்தில் விரைவுபடுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம், இதனால் அரசியல் தலைவர்களின்’ தூய்மையாக்கும் செயல்’ திறம்பட செய்ய முடியும்,” என்று அவர் கூறினார்.