வெளிநாட்டு தபால் வாக்காளர்கள் வாக்குச் சீட்டுகள் இன்னும் கிடைக்கவில்லை

15வது பொதுத் தேர்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது. இருப்பினும், சில தபால் வாக்காளர்கள், குறிப்பாக வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள், தங்களுக்கு இன்னும் வாக்குச் சீட்டுகள் கிடைக்கவில்லை என்று கூறினர்.

அவர்களில் சிலருக்கு சனிக்கிழமை (வாக்குப்பதிவு நாளன்று) மட்டுமே தபால் வாக்குச் சீட்டுகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

சமூக வலைதளமான ட்விட்டரில் பெர்னாமா நடத்திய ஆய்வில், கிட்டத்தட்ட ஒரு வாரமாகத் தபால் மூலம் வாக்களிக்கப் பதிவு செய்த வாக்காளர்கள் இருப்பதாகவும், ஆனால் இன்று வரை வாக்குச் சீட்டுகள் அவர்கள் கைக்கு வராததால் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தனது தபால் வாக்கின் நிலைகுறித்து தேர்தல் ஆணையத்திடமிருந்து (EC) தனக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று ட்விட்டர் கணக்கு வைத்திருப்பவர் எஸ் பிரேம் குமார் கூறினார்.

“நான் இந்தியாவில் படித்து வருகிறேன், தபால் வாக்காளராகப் பதிவு செய்துள்ளேன், ஆனால் எனக்கு வாக்குச் சீட்டுகள் கிடைக்கவில்லை,” என்று போர்ட் டிக்சன் நாடாளுமன்றத் தொகுதிக்கு வாக்களிக்கும் பிரேம் கூறினார்.

நியூயார்க்கில் வசிக்கும் மற்றொரு ட்விட்டர் பயனரான ஐரா நூர் அரியானாவும் தனது வாக்குச் சீட்டுகளைப் பெறாததால் அதே இக்கட்டான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.

தபால் வாக்குகள் அடங்கிய பொதுத் தேர்தலைத் தேர்தல் ஆணையம் நடத்துவது இது முதல் முறை அல்ல என்பதால், தபால் வாக்குச் சீட்டுகளைப் பெறுவதில் தாமதம் ஏற்படக் கூடாது என்றார்.

இதற்கிடையில், சவூதி அரேபியாவில் சைபர் பாதுகாப்பு ஆலோசகரான சைஃபுடின் அம்ரி, நவம்பர் 19 அன்று இரவு 8 மணிக்குள் (சவுதி அரேபியா நேரப்படி) மட்டுமே தனது தபால் வாக்குச் சீட்டுகள் வழங்கப்படும் என்று ஒரு கூரியர் நிறுவனத்திடமிருந்து தனக்கு அறிவிப்பு வந்ததாகக் கூறினார்.

“தேர்தல் முடிந்த பிறகுதான் வாக்குச் சீட்டுகளைப் பெறுவேன்… என்ன நகைச்சுவை, தேர்தல் ஆணையம்.”

தபால் வாக்குகளைப் பயன்படுத்தாமல், வெளிநாட்டு தபால் வாக்காளர்கள் மலேசிய தூதரகங்கள் அல்லது  துணைத் தூதரகங்களில் வாக்களிக்க அனுமதிப்பதன் மூலம் தேர்தல் ஆணையம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். அது இன்னும் சுலபமாக இருக்குமா?” சைஃபுதீன் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பான கேள்விகளுக்குத் தேர்தல் ஆணையம் இன்னும் பதிலளிக்கவில்லை.