அரசியல் அறிமுகம்: டாக்டர் பாலச்சந்திரன் கோபால்

இராகவன் கருப்பையா –இந்நாட்டில் சிறுபான்மையினருக்கென்றே விசேஷமாக ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்படவேண்டும் எனும் கோரிக்கையை முன் வைத்து கோப்பெங் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கியுள்ளார் டாக்டர் பாலச்சந்திரன் கோபால்.

நம் நாட்டில் எல்லாத் தரப்பினருக்கும் சரிசமமாக கல்வி வாய்ப்பு கிடைப்பதில்லை. குறிப்பாக சிறுபான்மையினர் நீண்ட நாள்களாகவே உதாசினப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கு ‘யுனிவர்சிட்டி மைனோரிட்டி’ எனும் பெயரில் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார் வாரிசான் கட்சியை பிரதிநிதித்து அத்தொகுதியில் போட்டியிடும் மருத்துவர் பாலா.

‘எதிர்வரும் பொதுத் தேர்தலில் நான் வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்திற்கு இவ்விவகாரத்தைக் கொண்டு செல்வேன்’ என்று சூளுரைக்கும் பாலா கோப்பெங் வட்டாரத்தில் மிகவும் பிரபலமான வைத்திய நிபுணராவார். ஒரு தோட்டப்பாட்டாளியின் மகனான அவர் வாரிசான் கட்சியின் கோப்பெங் தொகுதித் தலைவருமாவார்.

பத்து காஜா, கிந்தா கெலாஸ் தோட்டத்தில் கோபால், கங்காதேவி தம்பதியினரின் மூத்த மகனாகப் பிறந்த பாலா நியூஸிலாந்தின் அக்லண்ட் பல்கலைக் கழகத்தில் தமது மருத்துவக் கல்வியை பயின்றார். அதுமட்டுமின்றி இயந்திரப் பொறியியல் துறையிலும் அவர் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் வாரிசான் கட்சியில் இணைவதற்கு முன்பிருந்தே சமூக சேவைகளில் தீவிர ஈடுபாடு கொண்டுள்ள 45 வயதுடைய பாலா தலைநகர் மோண்ட் கியாரா பகுதியிலும் ஈப்போவிலும் 2 கிளினிக்குகளை நடத்திவருகிறார்.

அதோடு பினேங், பட்டர்வர்த்திலும் அவ்வப்போது மருத்துவ சேவைகளை அவர் வழங்கி வருகிறார். வசதி குறைந்த, நீரிழிவு நோயாளிகளுக்கு வெறும் ஒரு ரிங்கிட் செலவில் மருத்துவ சேவை வழங்குவது பாலாவின் சமூக சேவைகளில் முத்தாய்ப்பான ஒன்றாகும்.

அரசு சாரா அமைப்பு ஒன்றின் வழி அடையாளம் காணப்படும் பி40 தரப்பினருக்கு ஈப்போ கிளினிக்கிலும் மற்ற பல இடங்களில் அவ்வப்போது நடத்தப்படும் மருத்துவ முகாம்களிலும் இச்சேவை வழங்கப்படுவதாகக் கூறும் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றால் சிறமப்படுவோருக்கு மேலும் சிறப்பாக சேவையாற்ற முடியும் என்கிறார்.

கடந்த 4 ஆண்டுகளில் 350கும் மேற்பட்டோருக்கு சக்கர நாற்காலிகளை வழங்கியுள்ள பாலா எண்ணற்ற சுமையுந்து ஓட்டுநர்களின் பல்வேறுப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுள்ளார். கோப்பெங் பகுதியில் உள்ள பூர்வக்குடி மக்களுக்குத் தேவையான உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வரும் அவர் அடிதட்டு மக்களின் உற்றத் தோழனாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘வறுமையான சூழலில் தோட்டத்தில் வளர்ந்த எனக்கு வாழ்கையில் சிறமப்படுவோரின் நிலையை நன்கு உணரமுடியும்’ என்று கூறும் பாலா இரவு பகல் பாராமல் எந்நேரத்யிலும் களமிறங்கி உதவிக்கரம் நீட்டும் தன்மையுடையவராவார்.

இத்தகைய ஒரு சேவைத் திறனை அடிப்படையாகக் கொண்டுதான் வாரிசான் தலைவர் ஷாஃபி அப்டால் கோப்பெங்கில் போட்டியிட இவரைத் தேர்வு செய்துள்ளார். பக்காத்தானின் கோட்டையாக விளங்கும் இந்தத் தொகுதியில் பாலாவோடு சேர்த்து இம்முறை 4 முணைப் போட்டி நிகழ்கிறது.  அக்கூட்டணியைப் பிரதிநிதித்து, தான் கார் ஹிங்கும் பெரிக்காத்தான் சார்பில் முஹமட் ஃபர்ஹானும் பாரிசானைப் பிரதிநிதித்து கெல்லி திங்கும் இங்கு போட்டியிடுகின்றனர்.