அன்வார்: GE15 க்குப் பிறகு அரசாங்கத்தை அமைப்பது குறித்து PN, அம்னோ தலைவர்கள் சந்தித்தனர்

GE15 | பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம், 15 வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒத்துழைப்பது குறித்து விவாதிப்பதற்காக BN தலைவர்கள் தங்கள் பெரிகாத்தான் நேசனல் (PN) சகாக்களைச் சந்தித்ததாகக் கூறியுள்ளார்.

இதற்குக் காரணம், அன்வாரின் கூற்றுப்படி (மேலே), தேர்தல் நாள் நெருங்குகையில் GE15 போட்டியில் அந்தந்த கூட்டணிகள் பின்தங்கியுள்ளன என்பதை தலைவர்கள் உணர்கிறார்கள் என்றார்.

“அவர்கள் சந்தித்ததை நான் அறிவேன். PAS மற்றும் பெர்சத்து தலைவர்கள், ஹிஷாம்முடின் ஹுசைன் மற்றும் BN துணைத் தலைவர் டோக் மாட் முகமட் ஹசன் ஆகியோரை சந்தித்தனர்”.

“அவர்கள் பின்தங்கியுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதால் அவர்கள் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளனர். அதை ஏன் சத்தமாகச் சொல்லக் கூடாது?” சிலாங்கூரில் உள்ள செகின்சானில் வாக்காளர்களுடனான சந்திப்பின்போது பிகேஆர் தலைவர் இன்று முன்னதாகக் கூறியதை பெரிட்டா ஹரியான் மேற்கோளிட்டுள்ளது.

“எனவே, அம்னோவை நிராகரிக்கும் PN கருத்துக்கள், PAS மற்றும் பெர்சத்துவை அம்னோ நிராகரிப்பது போன்ற அனைத்து கருத்துக்களும் காட்டுவதற்காகவே,” என்று அவர் மேலும் கூறினார்.

PN, GE15 க்குப் பின்னர் அரசாங்கத்தை அமைக்க BN உடன் இணைந்து பணியாற்றலாம் என்று பாஸ் பொதுச் செயலாளர் தகியுத்தீன் ஹசன் நேற்றிரவு கூறியதைத் தொடர்ந்து அன்வாரின் கருத்து வந்துள்ளது.

PN தலைவர் முகைடின்யாசின் பின்னர் தகியுதீனின் கூற்றை நிராகரித்தார், BN அல்லது ஹராப்பான் இரண்டிலுமே இணைந்து செயல்படாமல் தானே அரசாங்கத்தை அமைக்கும் நோக்கில் PN GE15க்குள் செல்கிறது என்று வலியுறுத்தினார்.

GE15க்குப் பிறகு அரசாங்கத்தை அமைப்பதற்கு BN உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஆணையைத் தாம் ஒருபோதும் தகியுதீனுக்கு வழங்கவில்லை என்று முகைடின் மேலும் குறிப்பிட்டார்.