இலங்கைக்கு தொடர்ந்தும் உதவுவோம்! அமெரிக்கா அறிவிப்பு

இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக அமெரிக்கா உதவிகளை வழங்கும் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

அலி சப்ரியை சந்தித்த அன்டனி பிளிங்கன்

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை நேற்று அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பிளிங்கன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் அடுத்த வருடத்துடன் 75 வருட ராஜதந்திர உறவு பூர்த்தியடைகிறது.

இந்த நிலையில் அமெரிக்கா இலங்கைக்கு அன்பளிப்பு, கடன் மற்றும் ஏனைய உதவிகள் என்ற வகையில் 240 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. இந்த உதவி திட்டங்கள் தொடர்ந்தும் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

கலந்துரையாடப்பட்ட விடயங்கள்

தமது சந்திப்பின் போது, உலக காலநிலை விடயங்கள் அதில் இலங்கைக்கான திட்டங்கள் மற்றும் இலங்கையின் பொருளாதார பிரச்சினை குறித்து கலந்துரையாடியதாக பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை செய்தியாளர்களிடம் கருத்துரைத்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்காவின் உதவிகளுக்கு நன்றி கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாடுகள், அதற்கான அமெரிக்காவின் ஏற்பாடுகள் குறித்தும் சப்ரி இலங்கையின் நன்றியை தெரிவித்துள்ளார்.

 

 

 

-mm