இலங்கையில் கைப்பற்றப்படும் ஹெரோயின்கள் பெரும்பாலும் கோதுமை மாவாக மாற்றப்படுகின்றன

கைப்பற்றப்படும் ஹெரோயின்கள் பெரும்பாலும் கோதுமை மாவாக மாறுவதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு மற்றும் நீதி, சிறைச்சாலை விவகாரம், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக்கான பாதீட்டு ஒதுக்கீடு தொடர்பான இன்றைய குழுநிலை விவாத்தின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

சோதனைகளினபோது கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை மீண்டும் சந்தைக்கு வந்து மக்கள் கைகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இன்று பொருளாதாரம் பற்றி அதிகம் பேசப்படுகிறது. நாம் குறைவாக பேசினாலும், போதைப்பொருட்கள் என்ற விடயத்தினால் நாட்டுக்கு பாரிய ஆபத்து ஏற்படுகிறது.

தற்போது, 5 இலட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். கடந்த காலங்களில் ஐஸ் ஆபத்தான போதைப்பொருள் என்ற பட்டியலில் இருக்கவில்லை. இன்று ஐஸ் போதைப்பொருளை வைத்திருப்பவர்களுக்கு மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கும்படி, கடந்த மாதம் சட்டம் திருத்தப்பட்டது.

பொலிஸாரால் கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள், வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே மீண்டும் சந்தைக்கு வருகின்றன.

சான்று பொருட்களாக, பொலிஸாரின் சான்று அறைக்கு செல்லும் போதைப்பொருட்கள், கோதுமை மாவாக மாறும் நிலையில் போதைப்பொருட்கள் மீண்டும் சந்தைக்கு வந்து மக்கள் கைகளை அடைகின்றன.

கைப்பற்றிய போதைப்பொருட்களை மக்களுக்கு விற்றவர்களுக்கு  எதிராக கடந்த காலங்களில் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனவே, குறித்த பொருளை கைப்பற்றியவுடன் விசாரணைக்கு தேவையான அளவை மாத்திரம் வைத்துக்கொண்டு, மிகுதியை அழிப்பதற்கு சட்டத்திருத்தம் ஊடாக நீதிபதிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

 

-ift