ரஃபிஸி: ஏழைகளுக்கு மாதந்தோறும் ரிம2,000 வருவாய் ஈட்டுவதை மக்கள் வருமான முன்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது

மிகவும் வசதி குறைந்த ஏழைகள் மற்றும் B40 குழுவின் வருமானத்தை மாதத்திற்கு குறைந்தது ரிம2,000 ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட மக்கள் வருமான முன்முயற்சியை (People’s Income Initiative) அரசாங்கம் இன்று தொடங்கியுள்ளது.

அரசாங்கம், மக்கள் மற்றும் மூலோபாய பங்காளிகளை உள்ளடக்கிய கூட்டு முயற்சியின் மூலம் அடிமட்டத்தில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க இந்தத் திட்டம் பொது மற்றும் தனியார் துறைகளையும் சமூகத்தையும் பயன்படுத்தும் என்று பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி கூறினார்.

“IPRக்கு நிர்ணயிக்கப்பட்ட 2,000 ரிங்கிட் இலக்கு குறைந்தபட்ச இலக்கு வருமானமாகும். எடுத்துக்காட்டாக, விவசாயிகள் தங்கள் முதல் அறுவடையைச் செய்யும்போது மட்டுமே தங்கள் உழைப்பின் பலனை அனுபவிக்கத் தொடங்குவார்கள், ஆனால் அறுவடைக்காகக் காத்திருக்கும்போது, அரசாங்கம் மாதந்தோறும் ரிம500 கொடுப்பனவை வழங்கும்”.

“சாகுபடி, உள்கட்டமைப்பு, பயிற்சி மற்றும் வசதிகளுக்கான நிலத்தைத் தயார் செய்வது உட்பட வழங்க வேண்டிய அனைத்து உதவிகளும் 24 மாதங்களுக்குக் கணக்கிடப்பட்டுள்ளன,” என்று ஐ.பி.ஆரை அறிமுகப்படுத்தியபின்னர் அவர் கூறினார்.

ஐபிஆர் மூன்று மாதிரிகளை உள்ளடக்கியது, அதாவது உழவர் தொழில்முனைவோர் (Intan), உணவுத் தொழில் முனைவோர் முன்முயற்சி (Insan) மற்றும் சர்வீஸ் ஆபரேட்டர்கள் முன்முயற்சி (Ikhsan) இவை மக்களின் அன்றாடப் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க உருவாக்கப்பட்டன.

இந்தான் முன்முயற்சியின் கீழ், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், அதிக அளவு வர்த்தகம் மற்றும் தேவையைக் கொண்ட பயிர்களில் கவனம் செலுத்துவதற்கும் 323.7 ஹெக்டேர் கூட்டாட்சி அரசாங்க நிலத்தை அரசாங்கம் திறக்கும்.

மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் நிலப்பரப்பு 2,023 ஹெக்டேராக விரிவுபடுத்தப்படும்.

“உணவு மற்றும் விவசாய பொருட்களின் பற்றாக்குறை பிரச்சினையைச் சமாளிப்பதோடு மட்டுமல்லாமல், இது அந்தந்த மாநிலங்களில் வேலை வாய்ப்புகளையும் வழங்கும் மற்றும் மக்கள் வேலை தேடி பிற மாநிலங்கள் அல்லது நகரங்களுக்குக் குடிபெயர்வதைத் தவிர்க்கும் என்பதால் மாநில அரசுகள் இந்த முயற்சியை வரவேற்கும் என்று நான் நம்புகிறேன்”.

“எனவே, இந்தத் திட்டத்திற்கு பயன்படுத்தக்கூடிய மாநில அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்ய அவர்களின் ஒத்துழைப்பைக் கோர ஒவ்வொரு மந்திரி பெசாரையும் நான் சந்திப்பேன்,” என்று ரஃபிஸி கூறினார்.