மோசடிகளா? 997 எண்ணுக்குத் தொடர்பு கொண்டு புகார் செய்யுங்கள் -ஐஜிபி

ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை செய்யும்போது ஏதேனும் மோசடி நடவடிக்கைகள் ஏற்பட்டால் 997 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகாரளிக்குமாறு காவல்துறை அதிபர் அக்ரில் சானி அப்துல்லா சானி(Acryl Sani Abdullah Sani) பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.

முந்தைய அரசாங்கத்தின் கீழ் அக்டோபர் மாதம் நிறுவப்பட்ட தேசிய மோசடி பதில் மையத்தினால் (National Scam Response Centre) இந்த ஹாட்லைன் நிர்வகிக்கப்படுகிறது.

“பிரச்சினை என்னவென்றால், அனைவருக்கும் அதைப் பற்றித் தெரியாது, ஆனால் அது மிகவும் முக்கியமானது”.

“மோசடிகளால் பாதிக்கப்பட்ட பலருக்கு உதவக்கூடிய ஹாட்லைன் மற்றும் கால் சென்டர் பற்றிய செய்தியைப் பரப்புமாறு பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் நான் கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

இன்று காலைக் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற சிறந்த சேவை விருது வழங்கும் விழாவில் அக்ரில்(Acryl) (மேலே) செய்தியாளர்களிடம் பேசினார்.

NSRC  என்பது தேசிய நிதி குற்ற மையம் (National Financial Crime Centre), சைபர் செக்யூரிட்டி மலேசியா, காவல்துறை, பேங்க் நெகாரா மலேசியா (Bank Negara Malaysia), மலேசிய தகவல்தொடர்புகள் மற்றும் மல்டிமீடியா ஆணையம் (Malaysian Communications and Multimedia Commission), வங்கி நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும்.

இது ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அறிக்கைகளைப் பெறுவதாகும்.

2023 வரவுசெலவுத் திட்டத்தில், கால் சென்டருக்கு ரிம10 மில்லியன் ஒதுக்கீடு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

ஜொகூர் உதவி

இதற்கிடையில், வெள்ள நடவடிக்கைகளுக்கு உதவ 369 பணியாளர்களை ஜொகூருக்கு அனுப்பியுள்ளதாகக் காவல்துறைத் தலைவர் கூறினார்.

“இந்த மக்கள் முன்பு வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நாங்கள் அனுப்பிய முன்னாள்  வெள்ள பணிக்குழுவின் ஒரு பகுதியாக இருந்தனர்”.

சாஹ் காவல் நிலையம் மற்றும் செகாமட் போலீஸ் தலைமையகம் இரண்டிலும் நீர் மட்டம் உயர்ந்துள்ளது என்று அக்ரில் கூறினார்.

செகாமட் போலிஸ் தலைமையகத்திலிருந்து 126 பேர் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

வெள்ள அபாயமுள்ள மற்ற காவல் நிலையங்களையும் அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர் என்றார்.