அசாலினா: காவலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரிம1.54 மில்லியன் வழங்கியது நீதிமன்றம்

2016 மற்றும் 2022 க்கு இடையில் மூன்று தனித்தனி சிவில் வழக்குகளில் காவலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மொத்தம் 1.54 மில்லியன் ரிங்கிட்களை நீதிமன்றங்கள் வழங்கியுள்ளன.

மூன்று வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதாகப் பிரதமர் துறை (Law and Institutional Reform) அமைச்சர் அசாலினா ஓத்மான்(Azalina Othman) தெரிவித்துள்ளார்.

“அனைத்து வழக்குகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மொத்தம் ரிம1.54 மில்லியன் இழப்பீட்டை நீதிமன்றங்கள் நிர்ணயித்துள்ளன”.

எவ்வாறாயினும், இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டதா அல்லது வழக்கறிஞர்களிடமிருந்து இன்னும் மேல்முறையீடு உள்ளதா என்பதை காவல்துறையால் உறுதியாகக் கூற முடியாது என்று அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் துறை அமைச்சர் அஸலினா ஒத்மான்

அந்த நேரத்தில் காவலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கிய மொத்த இழப்பீட்டுத் தொகையை ஈப்போ பாரத் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் கோரியதற்கு அமைச்சர் பதிலளித்தார்.

குலசேகரன் இது போன்ற வழக்குகளில் குற்றவாளிகளின் பட்டியலையும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும் கேட்டார்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 330 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அசாலினா கூறினார்.

பிரிவு 330 “பாதிக்கப்பட்டவரிடமிருந்து மிரட்டிப் பணம் பறிக்கும் நோக்கத்திற்காகத் தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்துபவர்களை,” குறிக்கிறது.

குற்றவாளிகளுக்கு ஏழு ஆண்டுகள்வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.