சீன கிராமங்களில் கம்யூனிஸ்ட் தொடர்பு உண்டா? சீண்டிய பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்

சீன கிராமங்களில் கம்யூனிஸ்ட் தொடர்பு உண்டா? இனவாதத்தை சீண்டிய பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர், இப்போ மழுப்புகிறார்

நாடாளுமன்றத்தில் தாம் எழுப்பிய கேள்விகள் இனவெறி மற்றும் தேசத்துரோகமானவை என்ற குற்றச்சாட்டுகளைப் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் அப்துல் முத்தலிப் மறுத்துள்ளார்.

அவரது கேள்விக்கு, சீன புதிய கிராமங்கள் இன்னும் கம்யூனிஸ்ட் தொடர்புகளைக் கொண்டிருந்தால், அதைப் பாதுகாப்பு நோக்கங்களுக்காகத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறினார்.

“எனக்கு வரலாறு தெரியும். உதாரணமாக, சீன கிராமங்கள் கம்யூனிசத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடியிருப்புகளாக இருந்தன.

“எனவே இந்தக் கிராமங்களில் இன்னும் கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் நிலைத்திருக்க நான் விரும்பவில்லை,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

மேலும், புதிய கிராமங்களில் வசிப்பவர்கள் சுற்றியுள்ள சமூகங்களுடன் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

அதனால்தான், இந்தப் புதிய கிராமங்களைத் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சகத்தின் கீழ் கையாள்வதை அவர் பரிந்துரைத்தார், இதனால் அவர்கள் மற்ற சமூகங்களுடன் நன்றாகப் பழக முடியும் என்றும் அவர் விளக்கினார்.

கம்யூனிஸ்ட் கிளர்ச்சியின்போது கம்யூனிஸ்ட் போராளிகளால் அச்சுறுத்தப்பட்ட சீன சமூகத்தைப் பாதுகாக்க அரசாங்கம் புதிய கிராமங்களை நிறுவியது குறிப்பிடத்தக்கது.

இஸ்மாயில், சீன கிராமவாசிகளில் சிலருக்கு மலாய் மொழியின் சரளமான பிடிப்பு இல்லாததால், கிராமவாசிகள் மிகவும் ஒற்றை இனத்தவர்களாக இருக்கிறார்கள் என்று கூறினார்.

“மற்ற கிராமங்களில், எடுத்துக்காட்டாக, ஃபெல்டாவில், குறிப்பாக மலாய் மக்களுக்கானது என்றாலும், சீன மக்களும் உள்ளனர்,” என்று அவர் கூறினார்.

புதிய கிராமங்கள் ஏன் இன்னும் பராமரிக்கப்பட்டு வருகின்றன என்றும் அந்த இடங்களில் கம்யூனிசம் இன்னும் இருக்கிறதா என்றும் கேட்டு இஸ்மாயில் நாடாளுமன்ற வினாவைச் சமர்ப்பித்ததாக மலேசியாகினி முன்பு தெரிவித்திருந்தது.

அதே அமைச்சகத்தின் கீழ் உள்ள கிராமங்களை ஒன்றிணைக்கும் திட்டம் அரசாங்கத்திடம் உள்ளதா என்றும் அவர் கேட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்த உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுதியோன் இஸ்மாயில், கம்யூனிஸ்ட் கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தலைக் கையாள அவசரகாலத்தில் புதிய கிராமங்கள் உருவாக்கப்பட்டன.

அந்தக் காலகட்டத்தில் புதிய கிராமங்களில் மீள்குடியேறிய சீன கிராம மக்கள் கம்யூனிஸ்ட் கிளர்ச்சியாளர்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர்கள் முன்னாள் கம்யூனிஸ்டுகளோ அல்லது இயக்க ஆதரவாளர்களோ அல்ல என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுதியோன் இஸ்மாயில்

இந்தக் கேள்வியைத் தவிர, மலேசியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த குடிமக்களை “தோல் நிறத்தை” பொருட்படுத்தாமல் “அங்கீகரிப்பதற்கான” காரணத்தை நியாயப்படுத்தவும் இஸ்மாயில் அரசாங்கத்திடம் கேட்டிருந்தார்.

கூடுதலாக, தொழுகைக்கான (அஸான்) அழைப்பின் அளவைக் குறைக்க, மாநிலத்தில் உள்ள அனைத்து மசூதிகளுக்கும் ஒரு “மாநில அரசு” தடை விதித்தது ஏன் என்றும் அவர் கேட்டார்.

அவரது கேள்விகள் டிஏபி தலைவர் பி ராமசாமி உட்பட மற்ற சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து விமர்சனங்களைப் பெற்றன – இஸ்மாயிலின் “தீப்பற்றவைக்கும் ” கேள்விகளுக்குத் தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படலாம் என்று கூறினார்.

இஸ்மாயிலின் புதிய கிராமங்களைக் குறுகிய மனப்பான்மையுடன் எடுத்ததற்காகச் சிலாங்கூர் எக்ஸ்கோ இங் ஜி ஹன்  கூட அவரைச் சாடியுள்ளார்.