பிரதமர்: அரசு ஊழியர்களின் ஊதியத்தை, குறிப்பாகக் குறைந்த தரங்களை மறுஆய்வு செய்ய வேண்டிய நேரம்

பிரதமர் அன்வார் இப்ராஹிம், அரசு ஊழியர்களின், குறிப்பாகக் கீழ் தரத்தில் உள்ளவர்களின் சம்பளத்தை மதிப்பிடுவதற்கும் மறுஆய்வு செய்வதற்கும் இது சரியான நேரம் என்று கூறினார்.

நிதியமைச்சரான அன்வார் (மேலே), அரசாங்கத்தின் தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தின்போது, அரசு ஊழியர்கள் பொது சேவை ஊதியங்களில், குறிப்பாகக் கீழ் தரத்தில் உள்ளவர்கள் திருப்தியடையவில்லை என்பதை அறிந்திருப்பதாகக் கூறினார்.

அரசு ஊழியர்களின் சம்பளம் தொடர்பாக மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (Malaysian Trades Union Congress) மற்றும் பொது மற்றும் சிவில் சர்வீசஸ் மலேசியாவின் ஊழியர் சங்கத்தின் காங்கிரஸ் (Cuepacs) முன்வைத்த கோரிக்கைகளை அரசாங்கம் கவனமாக ஆராய்ந்து வருவதாகப் பிரதமர் கூறினார்.

“என்னைப் பொறுத்தவரை, ஒரு வருட காலத்திற்குள், வருவாயில் சாதகமான அதிகரிப்பு ஏற்பட்டால், அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்”.

“இதற்கிடையில், அனைத்து போனஸ் கொடுப்பனவுகள் மற்றும் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற வசதிகளுக்கு உதவ வேண்டும், ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் அது உடனடியாகச் செய்யப்படும், “என்று அவர் கூறினார்.

“Pekerja Pemangkin Wadah Malaysia Madani”, என்ற கருப்பொருளில் நடைபெற்ற தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தின்போது, MTUC  மற்றும் கியூபாக்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் அவற்றின் நிர்வாகத்தை மேம்படுத்தத் தலா 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்குவதாக அன்வார் அறிவித்தார்.

தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் கோரிக்கைகள் மற்றும் குறைகள் தொடர்பான விஷயங்களில் தொழிலாளர் சங்கங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படுவதை தான் விரும்பவில்லை என்று அன்வார் கூறினார்.

MTUC  மற்றும் கியூபாக்ஸ் ஆகியவற்றின் கோரிக்கைகளுக்குப் பேச்சுவார்த்தை நடத்த மனிதவள அமைச்சகம் முழுமையாக இடமளிக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

“முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் விவாதங்கள் நடக்கட்டும். கடந்த காலங்களில், தொழிற்சங்கங்களை சந்திக்க மறுத்த அமைச்சர்கள் இருந்தனர். எனது நிர்வாகத்தில் இது போன்ற நிலை ஏற்படுவதை நான் விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.

சேவையின் தரத்தையும் தொழிலாளர்களின் திறனையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல மாற்றங்களையும் அரசாங்கம் அவ்வப்போது அறிவிக்கும் என்று அன்வார் கூறினார்.

இதற்கிடையில், பெல்டா மற்றும் அதன் குடியேற்றவாசிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அரசாங்கம் கவனிக்கும் என்று அன்வார் கூறினார்.