தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்புச் சட்டம் கோரி குழு மனு அளித்துள்ளனர்

சுமார் 200 எண்ணெய் பனை தோட்டத் தொழிலாளர்கள் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரியிடம் உரிமையற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு வீட்டுவசதிச் சட்டத்தை அமல்படுத்துமாறு மனு அளித்துள்ளனர்.

சிலாங்கூரைச் சுற்றியுள்ள 41 தோட்டங்களிலிருந்து நான்கு பேருந்துகளில் வந்த அவர்கள் ஷா ஆலமில் உள்ள சுல்தான் சலாவுதீன் அப்துல் அஜீஸ் ஷா கட்டிடத்தின் முன் கூடினர்.

“நாங்கள் தோட்டத்தில் நான்கு தலைமுறைகளாக வேலை செய்து கொண்டிருந்தாலும், உறுதியளித்தபடி எங்களுக்கு இன்னும் வீடுகள் வழங்கப்படவில்லை,” என்று ஒரு பிரதிநிதி மலேசியாகினியிடம் கூறினார்.

49 வயதான முன்னாள் தோட்டத் தொழிலாளி வாணி வெள்ளையன், 60 வயதை எட்டும்போது, அவர்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள் என்றும், இது 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருவதாகவும் கூறினார்.

எங்களை வெளியேற்ற வேண்டும் என்றால், தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு வழங்க வேண்டும்.

“அவர்கள் நிலத்தை அபிவிருத்தி செய்ய விரும்பும்போது, அவர்கள் எங்களைத் தேடுகிறார்கள், ஆனால் அது ஏற்கனவே வெற்றிகரமாக இருக்கும்போது, அவர்கள் எங்களைப் புறக்கணிக்கிறார்கள்,” என்று அவர் இன்று மலேசியாகினியிடம் கூறினார்.

கார்த்திகேஸ் ராஜா மாணிக்கம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடமைப்புத் திட்டத்தை வழங்குவதற்கான சட்டத்தை இயற்றுவதற்காக விசேடமாகச் செயலணியொன்றைக் கோருவதற்கான மகஜர் ஒன்றை கையளிப்பதாகத் தோட்டச் சமூக ஆதரவுக் குழுவின் தேசிய இணைப்பாளர் கார்த்திகேஸ் ராஜ மாணிக்கம் தெரிவித்தார்.

“நாங்கள் முன்மொழிவை வரைந்தோம், மாநில அரசு அதை மதிப்பீடு செய்து எந்தத் திருத்தங்களையும் செய்யலாம்,” என்று கார்த்திகேஸ் கூறினார்.

கார்த்திகேஸின் கூற்றுப்படி, தோட்டத் தொழிலாளர்கள் வரைவை செய்வதற்காகச் சிறிது பணத்தைத் திரட்டியுள்ளனர், மேலும் சட்ட வல்லுநர் ரகுநாத் கேசவன் மற்றும் பினாங்கு துணை முதல்வர் பி.ராமசாமி பழனிசாமி உள்ளிட்டோருக்கு பரிந்துரைத்துள்ளனர்.