மரண தண்டனையை மறுஆய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

முன்னதாகக் கட்டாய மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு கைதிகளுக்கு எதிரான மரண தண்டனையை மறுஆய்வு செய்யப் பெடரல் நீதிமன்றம் இன்று தொடங்கியது.

மரண தண்டனை மற்றும் இயற்கை வாழ்வுக்கான சிறைத்தண்டனை திருத்தம் (பெடரல் நீதிமன்றத்தின் தற்காலிக அதிகார வரம்பு) சட்டம் 2023 செப்டம்பர் 12 அன்று நடைமுறைப்படுத்தப்பட்ட முதல் மறுஆய்வு நடவடிக்கைகள் இவை.

போதைப்பொருள் கடத்தலுக்காக 1952 ஆம் ஆண்டின் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் பிரிவு 39B இன் கீழ் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 7 பேரும் மரண தண்டனையில் உள்ளனர் என்று பிரதமர் துறையின் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள்) அமைச்சர் அஸலினா ஓத்மான் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பிரிவு 39B இன் கீழ் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் ஏழு கைதிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பொதுவாகப் பெரிய குற்றவாளிகளுக்குப் பதிலாக, குறைந்த அளவிலான போதைப்பொருள் வியாபாரிகளுக்குப் பொருந்தும் என்பதால், பிரிவின் பயன்பாடு அடிக்கடி விமர்சனத்துக்குள்ளானது.

பிரதமர் துறை அமைச்சர் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள்) அஸலினா ஒத்மான்

“இன்று தேசத்திற்கு ஒரு வரலாற்று நாள்… மலேசியாவின் குற்றவியல் நீதி அமைப்பில் மறுசீரமைப்பு நீதியின் கொள்கை எப்போதும் பராமரிக்கப்படுகிறது என்பதை இது நிரூபிக்கிறது”.

“இந்த வெற்றி மனித உரிமைகளை மேம்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது,” என்று அவர் கூறினார்.

மலேசியாவில் மரண தண்டனை இன்னும் உள்ளது, ஆனால் அது இனி கட்டாயமில்லை, நீதிமன்றத்தின் விருப்பப்படி மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் அஸலினா வலியுறுத்தினார்.

மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை கைதிகள் 1,020 பேர் மறுஆய்வுக்கான விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யத் தகுதியுடையவர்கள் என்று அமைச்சர் கூறினார்.

கருத்தில் கொள்ள வேண்டிய பல காரணிகள்

நவம்பர் 9 ஆம் தேதிவரை, பெடரல் நீதிமன்றத்தில் மரண தண்டனை கைதிகளிடமிருந்து 861 விண்ணப்பங்களும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளிடமிருந்து 117 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.

“கைதியின் வயது, உடல்நிலை மற்றும் சிறைவாசத்தின் காலம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை நீதிமன்றங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளும்,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்தச் சமீபத்திய வளர்ச்சி கைதிகள் சமூகம் மற்றும் குடும்பத்திற்கு திரும்புவதற்கான இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு இணங்குவதாக அவர் கூறினார்.

கடந்த ஏப்ரல் மாதம் கட்டாய மரண தண்டனையை ரத்து செய்ய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.