கடந்த ஆண்டு பினாங்கில் மொத்தம் 6,781 குழந்தைகளுக்குப் பேச்சு அல்லது மொழி கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டதாக மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதாரக் குழு ஆட்சிக் குழுத் தலைவர் தெரிவித்தார்.
இருப்பினும், அரசு மருத்துவமனைகளில் பினாங்கு சுகாதாரத் துறையின் பேச்சு சிகிச்சையாளர்களின் எண்ணிக்கை ஏழு மட்டுமே என்றும், சிகிச்சைக்காகச் சராசரியாகக் காத்திருக்கும் நேரம் 205 நாட்களை எட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, குழந்தைகள் நலத் துறையால் தொடங்கப்பட்ட முயற்சிகளில் ஒன்று, பல்வேறு பட்டறைகள் மற்றும் பயிற்சி அமர்வுகள்மூலம் பெற்றோருக்குப் பயிற்சி அளிப்பதாகும், இதனால் அவர்கள் வீட்டிலேயே சிகிச்சையைத் தொடரவும், அவர்களின் குழந்தைகளின் சிகிச்சைக்கு உதவவும் முடியும்.
“இந்த முயற்சி சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்று அவர் இன்று ஜார்ஜ் டவுனில் நடந்த மாநில சட்டமன்றக் கூட்டத்தில், அரசு மருத்துவமனைகளில் பேச்சு சிகிச்சையாளர்களின் எண்ணிக்கை மற்றும் சிகிச்சை காத்திருப்பு காலத்துடன் ஒப்பிடும்போது பேச்சு மற்றும் மொழி குறைபாடுகளுள்ள குழந்தைகளின் எண்ணிக்கைகுறித்து ஹெங் லீ லீ (Harapan-Berapit) எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தார்.
மாநில அரசு கூடுதல் பேச்சு சிகிச்சையாளர் பதவிகளைக் கோரியுள்ளதாகவும், சிகிச்சை காத்திருப்பு நேரத்தைக் குறைக்க தனியார் மருத்துவமனைகளுடன் ஒத்துழைப்பை முன்மொழிந்த அதே வேளையில், அமைச்சர்கள் மட்டத்தில் இந்த விஷயத்தைப் பலமுறை எழுப்பியுள்ளதாகவும் கூய் (மேலே) கூறினார்.
பினாங்கில் சிறப்புத் தேவைகளுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 2021 இல் 4,547 ஆக இருந்து இந்த ஆண்டு மே மாத நிலவரப்படி 6,165 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தப் புள்ளிவிவரங்களில் கற்றல் குறைபாடுகளுள்ள 5,264 குழந்தைகள், உடல் குறைபாடுகளுள்ள 326 குழந்தைகள், பல குறைபாடுகளுள்ள 173 குழந்தைகள், செவித்திறன் குறைபாடுகளுள்ள 233 குழந்தைகள் மற்றும் பார்வை குறைபாடுகளுள்ள 145 குழந்தைகள் அடங்குவர் என்று அவர் கூறினார்.