பி.கே.ஆர். கட்சி பிளவுபடுமா? நம் சமூகத்தின் நிலை என்ன?

இராகவன் கருப்பையா- நடந்து முடிந்த பி.கே.ஆர். கட்சித் தேர்தல்கள் சற்று பரபரப்பாக இருந்ததை நம்மால் காண முடிந்தது. இதற்கு மூலக் காரணம் அக்கட்சி பிரதமர் அன்வாரைத் தலைவராகக் கொண்டது என்பதோடு அவருடைய மகள் நூருல் முக்கிய பதவிக்குப் போட்டியிட்டதுதான்.

ஆற்றல் மிக்க ஒரு அரசியல்வாதியான ரஃபிஸியை ஓரங்கட்டியுள்ள இத்தேர்தலில் கிடைத்த வெற்றியை நூருல் கொண்டாடுவதில் அர்த்தமில்லை.

ஏனெனில் கட்சியின் துணைத் தலைவராவதற்கான போட்டியில் அவர் பெற்ற வெற்றியானது அவருடையத் திறமைக்கான அங்கீகாரம் என்பதை விட பிரதமரின் மகள் என்பதால்தான் எனும் உண்மை உள்ளங்கை நெல்லிக்கனி.

அவருடைய தந்தை கட்சியின் தலைவராக இல்லாதிருந்தால் யார் வெற்றி பெற்றிருப்பார்?

நாட்டிலேயே மிகவும் சக்தி வாய்ந்த பதவியில் இருக்கும் ஒருவருடைய மகளுக்கு எப்படி தோல்வி ஏற்படும்? அவருக்குத் தங்கத் தட்டில் அல்லவா மகுடம் வழங்கப்பட்டுள்ளது!

கடந்த 2006ஆம் ஆண்டில் நடைபெற்ற ம.இ.கா.வின் துணைத் தலைவருக்கானத் தேர்தல்தான் நமக்கு இப்போது ஞாபகம் வருகிறது.

அந்த சமயத்தில் அரசியலில் ஒரு கத்துக் குட்டியாக இருந்த பழநிவேல், ஏறத்தாழ 27 ஆண்டுகாலம் அரசியலில் பரந்த அனுபவத்தைக் கொண்டிருந்த சுப்ரமணியம் சின்னையாவை எளிதில் தோற்கடித்தார்.

அதற்கு முக்கிய காரணம் கட்சியின் அப்போதையத் தலைவர் சாமிவேலுதான் என்பது எல்லாருக்கும் தெரியும்.  பழநிவேலுக்கு அரசியல் ஆளுமை மிகக் குறைவு எனும் போதிலும் சாமிவேலுவின் கண் அசைவில் அவர் வெற்றி பெற்றார் என்பதுதான் உண்மை.

பி.கே.ஆர். கட்சியைப் பொருத்த வரையில் அதன் வளர்ச்சிக்கு ரஃபிஸி ஆற்றியுள்ள பங்கு அளப்பறியது. குறிப்பாக அன்வார் சிறையில் இருந்த காலத்தில் கட்சியை பல வகையிலும் வளப்படுத்துவதில் அவர் பெரும் பங்காற்றியுள்ளார்.

எனினும் கடந்த 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு பொருளாதார அமைச்சராக நியமனம் பெற்ற அவர் அவ்வளவாக சோபிக்க இயலவில்லை.

ஏனெனில், ‘மயிலை பிடித்து காலை ஒடித்து ஆடச் சொல்லுகிற உலகம், குயிலை பிடித்து கூண்டில் அடைத்து பாடச் சொல்லுகிற உலகம்,’ எனும் சூழலுக்கு அவர் தள்ளப்பட்டார் என்று கூறப்படுகிறது.

சக்தி வாய்ந்த நிதியமைச்சர் பதவியை தன் வசம் வைத்துக்கொண்ட அன்வார், மற்றொரு பலமிக்கப் பொறுப்பான உள்துறை அமைச்சர் பதவிக்கு, தேர்தலில் தோல்வியுற்ற சைஃபுடினை நியமனம் செய்தார்.

ஏதோ காரணங்களுக்காக ரஃபிஸியை ஓரங்கட்டும் படலம் அப்போதே தொடங்கிவிட்டது என்று நம்பப்படுகிறது.

“நூருல் அவசரப்பட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. ரஃபிஸியை எதிர்த்து அவர் போட்டியிட்டிருக்கக் கூடாது,” என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இத்தேர்தல் கட்சியை வலுப்படுத்தும் என்பதைவிட பிளவை ஏற்படுத்தக் கூடிய சாத்தியமே அதிகம் என்று பரவலாகக் கருதப்படுகிறது.

“கட்சியின் துணைத் தலைவருக்கான போட்டியில் தோல்வியடைந்தால் அமைச்சர் பொறுப்பில் இருந்து நான் விலகிவிடுவேன்” என ஏற்கெனவே அவர் அறிவித்திருந்தார்.

இத்தகைய சூழலில் கட்சியில் உள்ள இந்தியர்கள் மட்டுமின்றி பொதுவாக நம் சமூகத்திற்கு ஆக்ககரமான பயன் ஏற்படும் என்று எதிர்பார்த்தால் அது ‘இலவு காத்தக் கிளி’யாகத்தான் முடியும்.

“இந்தியர்களின் பிரச்சனைகளை நான் கவனிப்பேன்,” என கானொலி ஒன்றின் வழி நூருல் பேசியதை நம் சமூகத்தைச் சார்ந்த பெரும்பாலானோர் நம்பத் தயாராய் இல்லை என்றேத் தெரிகிறது. அந்தக் கானொலியை நம்மில் பலர் ஒரு கேலியாகவேப் பார்த்து கிண்டலடிக்கின்றனர்.

இதற்கு முக்கிய காரணம், கடந்த காலங்களில் அரசியல்வாதிகளின் இத்தகைய வாக்குறுதிகள், அவர்கள் வெற்றி பெற்ற பிறகு ‘புஸ் வானம்’ போல காற்றில் கரைந்த சோகமான, விரக்தியை ஏற்படுத்திய அனுபவங்கள்தான் நமக்கு அதிகம்.

நூருல் மட்டும் விதிவிலக்கா என்ன? என்றே நமக்கு எண்ணத் தோன்றுகிறது! நம் எண்ணம் பொய் என்பதை நூருல் நிருபிக்க வாய்ப்பில்லை, காரணம் அவருக்கு உள்ள அரசியல் பலம் அல்ல, நம்மிடையே இருக்கும் பலவீனமாகும்.