சாலைப் பாதுகாப்புக் கொள்கைகளை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைக் கட்டாயமாக அமல்படுத்துவது உள்ளிட்ட புதிய கொள்கைகளை அரசாங்கம் உருவாக்கி வருகிறது.
இந்தக் கொள்கை முழுமையாக மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அது செயல்படுத்தப்படும்போது எந்த விதமான கையாளுதலுக்கும் இடமளிக்காத வகையில் அதன் வழிமுறைகள் குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
“சாலைப் பாதுகாப்புக் கொள்கைகளை வலுப்படுத்தும் முயற்சிகளை அரசாங்கம் ஒருபோதும் நிறுத்தாது”.
“சாலை பயனர்களைப் பாதுகாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம், குறிப்பாகப் பொறுப்பற்ற ஓட்டுநர்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பு தரங்களைப் பூர்த்தி செய்யாத கனரக வாகனங்களின் அச்சுறுத்தலிலிருந்து,” என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்தார்.
நேற்று, கெரிக்கின் தாசிக் பந்திங் அருகே கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில், திரங்கானுவின் ஜெர்திஹ்-லிருந்து பேராக், தஞ்சோங் மாலிம் நோக்கிச் சென்ற ஒரு வாடகைப் பேருந்து, பல்நோக்கு வாகனத்துடன் (MPV) மோதியபின்னர் கவிழ்ந்ததில், சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தின் (UPSI) 15 மாணவர்கள் உயிரிழந்த விபத்தில் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்தத் துயரச் சம்பவத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் உதவியாளர், பெரோடுவா அல்சா MPV-யின் ஓட்டுநர் மற்றும் மூன்று பயணிகள் உட்பட 33 பேர் காயமடைந்தனர்.